பிரிஸ்பேன்: இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி பயிற்சியின் போது 4 மற்றும் 5 ஆகிய ஸ்டம்ப் லைனில் வீசப்படும் பந்துகளை சிறப்பாக லீவ் செய்வதாகவும், அதனை களத்தில் செயல்படுத்த முடியாமல் தவிப்பதாகவும் அனுபவ வீரரான புஜாரா தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி 3 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இம்முறையும் வழக்கம் போல் ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியில் சென்ற பந்தை, தாமாக அடிக்க சென்று விக்கெட்டை பறிகொடுத்துள்ளார். இத்தனை அந்த பந்து 7வது ஸ்டம்ப் லைனில் வீசப்பட்ட பந்தாகும்.

மிகவும் சாதாரண பந்தில் விராட் கோலி ஆட்டமிழந்தது ரசிகர்களிடையே கடுமையான விமர்சனங்களை பெற்று வருகிறது. ஏனென்றால் கடந்த 4 ஆண்டுகளாகவே விராட் கோலி அவுட் சைட் ஆஃப் ஸ்டம்ப் லைன் பந்துகளுக்கு மீண்டும் மீண்டும் விக்கெட்டை பறிகொடுத்து செல்கிறார். விராட் கோலி ஆட்டமிழந்தை பந்துகளை மீண்டும் திரும்பி பார்த்தால், அவையனைத்தும் ஒரே மாதிரியான பந்துகள் என்பதும் தெரிய வரும்.
இதனால் விராட் கோலி தாமதிக்காமல் ஓய்வை அறிவிக்க வேண்டும் என்று ரசிகர்கள் பேச தொடங்கியுள்ளனர். இதுகுறித்து புஜாரா பேசுகையில், 4வது ஸ்டம்ப் மற்றும் 5வது ஸ்டம்ப் என்று ஒரே பகுதியில் பந்துகளை வீசும் போது, விராட் கோலி ஷாட் விளையாட முயற்சித்து ஆட்டமிழக்கிறார். விராட் கோலியின் டெக்னிக் மூலமாக புதிய பந்தை எதிர்கொள்ள முடியாது.
அவருக்கு 10, 15 அல்லது 20 ஓவர்களுக்கு பின் பேட்டிங் கொடுக்க வேண்டும். அவரின் சதம் கூட பழைய பந்தில் வந்தது தான். புதிய பந்தில் பவுலிங் செய்யும் போது, பவுலர்கள் புத்துணர்ச்சியுடன் இருப்பார்கள். அவர்களின் மன உறுதியும் அதிகமாக இருக்கும். அதிலும் இன்றைய ஆட்டத்தில் விரைவாக 2 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தனர். மொத்த அணியும் எனர்ஜியுடன் இருக்கும் போது, பேட்டிங் செய்வது எளிதான விஷயமல்ல.
விராட் கோலி அவரின் பேட்டிங் ஸ்டைலையும், டெக்னிக்கையும் நன்றாக உணர்ந்தவர். அவர் வலைப்பயிற்சியை பார்த்த போது, அவுட் சைட் ஆஃப் ஸ்டம்ப் லைனில் வீசப்பட்ட பந்துகளை மிகச்சிறப்பாக லீவ் செய்தார். ஆனால் அதனை களத்தில் சரியாக செயல்படுத்த முடியவில்லை. அவரும் களத்தில் பந்தை விக்கெட் கீப்பரிடம் விடுவதற்கு தான் விரும்புகிறார். ஆனால் தானாக கையும், பேட்டும் அந்த பக்கம் நகர்கிறது.
அதனை விராட் கோலி தடுத்து நிறுத்த வேண்டும். அதற்கு மனநிலையில் மாற்றம் செய்ய வேண்டும். அதேபோல் அவுட் சைட் ஆஃப் ஸ்டம்ப் லைனில் வீசப்படும் பந்துகளை விளையாடுவதில் சில டெக்னிக்கும் இருக்கிறது. அதே பந்தை விக்கெட் கீப்பரிடம் விடுவதற்கும் சில டெக்னிக்கல் மாற்றங்களை விடவும் மனநிலையில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.