5 ஆண்டுகளாக போராடுகிறார்.. விராட் கோலியின் கவனம் கிரிக்கெட்டில் இல்லை.. ராபர்ட்ஸ் கருத்து!
பிரிஸ்பேன்: இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட் பக்கம் முழு கவனத்தை திருப்பினால் மட்டுமே ரன்களை குவிக்க முடியும் என்று வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் ஆண்டி ராபர்ட்ஸ் அறிவுறுத்தியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டின் தரம் அடுத்தக் கட்டத்திற்கு சென்றுவிட்டதாக கூறியுள்ள அவர், விராட் கோலி 5 ஆண்டுகளாக ஃபார்மின்றி தவித்து வருவதாக விமர்சித்துள்ளார்.

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்தித்த பின், காற்று மொத்தமாக கங்காரு பாய்ஸ் பக்கம் திரும்பியுள்ளது. இனி இந்திய அணி பார்டர் கவாஸ்கர் கோப்பையை வெல்ல வாய்ப்பில்லை என்று பலரும் விமர்சித்து வருகின்றனர். அதேபோல் ஆஸ்திரேலியா முன்னாள் வீரர்களும் இந்திய வீரர்களை பலவீனப்படுத்தும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
முகமது சிராஜை குறி வைத்து ஆஸ்திரேலியா முன்னாள் வீரர்கள் அட்டாக் செய்து வருவது வெளிப்படையாகவே தெரிகிறது. இதனிடையே விராட் கோலியின் ஆட்டம் மீதான விமர்சனங்களும் கவனம் பெறத் தொடங்கியுள்ளன. பெர்த் டெஸ்ட் போட்டியில் சதம் விளாசிய விராட் கோலி, அடிலெய்டு டெஸ்ட் போட்டியில் 7 மற்றும் 11 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.இதனால் விராட் கோலியின் கவனம் டெஸ்ட் கிரிக்கெட் இல்லை என்று விமர்சிக்க தொடங்கியுள்ளனர். இதுதொடர்பாக வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் ஆண்டி ராபர்ட்ஸ் பேசுகையில், அடிலெய்டு தோல்விக்கு பின் இந்திய அணி மீண்டு வருவதற்கான வாய்ப்பில்லை என்று நினைக்கிறேன். ஆனால் குறைந்தபட்சம் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட முடியும் என்று நினைக்கிறேன்.
ஆனால் 5 ஆண்டுகளாக நட்சத்திர வீரரான விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் ஃபார்மின்றி தவித்து வருகிறார். விராட் கோலி மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டில் முழு கவனத்தையும் கொண்டு வர வேண்டும். அப்போது தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் ரன்களை குவிக்க முடியும். அதுமட்டுமல்லாமல் டெஸ்ட் கிரிக்கெட்டின் தரம் தற்போது அடுத்தக் கட்டத்திற்கு சென்றுவிட்டது என்று அறிவுறுத்தியுள்ளார்.
ஏற்கனவே டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துவிட்ட விராட் கோலி, தற்போது டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வெறும் 93 ரன்களை மட்டுமே சேர்த்திருந்த விராட் கோலி, பெர்த் டெஸ்டில் அபாரமாக விளையாடி சதம் விளாசி ஃபார்முக்கு திரும்பினார்.
ஆனால் அடுத்தப் போட்டியிலேயே மீண்டும் மோசமான ஆட்டத்தையே வெளிப்படுத்தி இருக்கிறார். இதனால் விராட் கோலியின் பேட்டிங் ஃபார்ம் குறித்த கேள்விகள் அதிகரித்துள்ளது. காபா பிட்ச் பேட்ஸ்மேன்கள் மற்றும் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும் என்பதால், விராட் கோலி பேட்டில் இருந்து கட்டாயம் ரன்கள் வந்தால் மட்டுமே இந்திய அணி வெற்றி பெற முடியும் என்று பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications