பிரிஸ்பேன்: ஆஸ்திரேலியாவின் 5 மைதானங்களில் சதம் விளாசிய 3வது வீரர் என்ற சாதனையை படைக்க இந்திய அணியின் விராட் கோலிக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. 147 வருட டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில், ஆஸ்திரேலியாவின் 5 மைதானங்களிலும் சுனில் கவாஸ்கர் மற்றும் அலைஸ்டர் குக் இருவரும் மட்டுமே இந்த சாதனையை படைத்துள்ளனர்.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் உள்ள காபா மைதானத்தில் நடக்கவுள்ளது. கடந்த முறை காபா மைதானத்தில் விளையாடிய போது, ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தி இந்திய அணி வரலாற்று சாதனை படைத்தது. இந்த மைதானத்தை பொறுத்தவரை, புதிய பந்தில் இருந்து தப்பித்தால் எளிதாக ரன்களை குவிக்க முடியும்.

இதனால் இந்திய அணியின் விராட் கோலி பெர்த் மைதானத்தில் வெளிப்படுத்திய ஆட்டத்தை காபா மைதானத்தில் வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை ஆஸ்திரேலியா மண்ணில் மட்டும் விராட் கோலி 3 வடிவங்களிலும் சேர்த்து 12 சதங்களை விளாசி இருக்கிறார். ஆஸ்திரேலியா மண்ணில் அதிக சதங்களை விளாசிய வெளிநாட்டு வீரர் என்ற சாதனையையும் செய்துள்ளார்.
ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் பொறுத்த வரை இங்கிலாந்து வீரர்களான ஜாக் ஹாப்ஸ் மற்றும் வால்டர் ஹேம்மண்ட் இருவரும் ஆஸ்திரேலியா மண்ணில் அதிக சதங்களை விளாசி இருக்கின்றனர். இவர்கள் இருவரும் தலா 9 சதங்களை விளாசி இருக்கின்றனர். விராட் கோலியை பொறுத்தவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் 7 சதங்களை ஆஸ்திரேலியா மண்ணில் அடித்துள்ளார்.
இந்த 7 சதங்களில் அடிலெய்டு மைதானத்தில் 3 சதங்களும், பெர்த் மைதானத்தில் 2 சதங்களும், சிட்னி மற்றும் மெல்போர்ன் மைதானத்தில் தலா ஒரு சதம் அடிக்கப்பட்டுள்ளது. இதுவரை விராட் கோலி பிரிஸ்பேன் மைதானத்தில் மட்டும் சதம் விளாசியதில்லை. பிரிஸ்பேனில் உள்ள காபா மைதானத்தில் விராட் கோலி சதமடிக்கும் பட்சத்தில், புதிய சாதனை ஒன்றை சமன் செய்யும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
147 வருட டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஆஸ்திரேலியாவில் உள்ள முக்கிய மைதானங்களான அடிலெய்டு, சிட்னி, மெல்போர்ன், காபா மற்றும் பெர்த் ஆகிய 5 மைதானங்களிலும் சதமடித்த வெளிநாட்டு வீரர்களின் பட்டியலில் 2 பெயர்கள் மட்டுமே உள்ளது. இந்திய ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் மற்றும் இங்கிலாந்து ஜாம்பவான் அலைஸ்டர் குக் இருவர் மட்டுமே 5 மைதானங்களிலும் சதம் விளாசியுள்ளனர்.
இவர்கள் இருவரின் சாதனையையும் சமன் செய்யும் வாய்ப்பு விராட் கோலிக்கு அமைந்துள்ளது. ஆனால் காபா மைதானத்தில் விராட் கோலி இதுவரை ஒரேயொரு டெஸ்ட் போட்டியில் மட்டுமே விளையாடி இருக்கிறார். அந்த போட்டியிலும் இரு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து 20 ரன்களை மட்டுமே சேர்த்திருக்கிறார். இதனால் விராட் கோலி கம்பேக் கொடுத்து சாதனை படைப்பாரா என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
காபா மைதானத்தை பொறுத்தவரை ஆஸ்திரேலியா அணிக்கு மிகவும் ராசியான மைதானமாக பார்க்கப்பட்டு வந்தது. 34 ஆண்டுகளாக காபா மைதானத்தில் ஆஸ்திரேலியா அணி தோல்வியையே சந்திக்கவில்லை. அந்த சாதனையை இந்திய அணி முறியடித்த வரலாறு படைத்த நிலையில், கடந்த ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணியும் காபா மைதானத்தில் ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தியது. இதனால் காபா மைதானத்தில் விராட் கோலி ஃபார்முக்கு திரும்பினால், இந்திய அணி மீண்டும் அசாத்தியத்தை நிகழ்த்தும் என்று நம்பப்படுகிறது.