ஆஸ்திரேலிய தொடர்
இந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஆன கிரிக்கெட் தொடர்கள் நவம்பர் 27 முதல் துவங்க உள்ளது. நவம்பர் 27 அன்று ஒருநாள் தொடர் துவங்கி டிசம்பர் 2 வரை நடைபெற உள்ளது. டிசம்பர் 4 முதல் 8 வரை டி20 தொடர் நடைபெற உள்ளது.
டெஸ்ட் தொடர்
அதைத் தொடர்ந்து டிசம்பர் 17 முதல் ஜனவரி 19 வரை நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது. இது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் ஒரு பகுதி. இந்த நான்கு போட்டிகளில் வென்றால் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் இந்தியா முதல் இடத்தை தக்க வைக்க முடியும்.
பயிற்சி அவசியம்
இந்திய அணி வீரர்கள் கடந்த 10 மாதத்தில் ஐபிஎல் தொடரில் மட்டுமே ஆடி உள்ளனர். எனவே, டெஸ்ட் தொடருக்கு முன் அவர்களுக்கு அதற்கு ஏற்ற சூழ்நிலையில் ஆட நீண்ட பயிற்சி அவசியம். இதற்காக அணித் தேர்வில் இருந்தே அணி நிர்வாகம் திட்டமிட்டது.
மூன்று அணிகள்
ஒரே நேரத்தில் ஒருநாள் அணி, டி20 அணி, டெஸ்ட் அணி அறிவிக்கப்பட்டது. மூன்று அணிகளிலும் பங்கேற்கும் வீரர்கள் தவிர ஒன்று அல்லது இரண்டு அணிகளில் மட்டுமே பங்கேற்கும் வீரர்களையும் சேர்த்து பயிற்சிக்கான திட்டம் வடிவமைக்கப்பட்டது.
குவாரன்டைனில் பயிற்சி
இந்திய வீரர்கள் ஐபிஎல் தொடரில் தங்கள் அணிகளில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து காக்கும் பாதுகாப்பு வளையத்தில் இருந்தனர். அங்கே இருந்து நேராக ஆஸ்திரேலியா சென்றுள்ளனர். அங்கே முதல் இரு வாரங்கள் நிச்சயம் குவாரன்டைனில் இருந்தே ஆக வேண்டும்.
அனுமதி
பொதுவாக குவாரன்டைன் செய்யும் போது ஒரு வீரர் மற்றொரு வீரரை கூட சந்திக்கக் கூடாது. அறையை விட்டே வரக் கூடாது. ஆனால், இந்திய வீரர்கள் ஐபிஎல் பாதுகாப்பு வளையத்தில் இருந்ததை சுட்டிக் காட்டி வீரர்கள் ஹோட்டலை விட்டு வெளியே வராமல் உள்ளேயே பயிற்சி செய்ய அனுமதி வாங்கியது பிசிசிஐ.
கோலி - ரவி சாஸ்திரி திட்டம்
கேப்டன் விராட் கோலி, பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பயிற்சிக்கான நீண்ட திட்டத்தை வகுத்தனர். முதலில் இருந்தே டெஸ்ட் அணி வீரர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. டெஸ்ட் அணியில் இல்லாத வீரர்கள மட்டும் வெள்ளைப் பந்தில் பயிற்சி செய்தனர்.
டெஸ்ட் பயிற்சி ஆட்டம்
டெஸ்ட் அணி வீரர்கள் ஒருநாள், டி20 அணியில் இடம் பெற்று இருந்தாலும் அவர்கள் டெஸ்ட் போட்டியில் பயன்படுத்தப்படும் சிவப்புப் பந்திலேயே பயிற்சி செய்தனர். அது மட்டுமின்றி இந்திய வீரர்களுக்கு இடையே பயிற்சி டெஸ்ட் போட்டி நடத்தப்பட்டது.
இரு அணிகள்
வீரர்கள் இரு அணிகளாக பிரிந்து பயிற்சி டெஸ்டில் ஆடினர். ஆஸ்திரேலியா சென்ற இரண்டாம் நாள் முதல் இந்திய வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது. தற்போது ஒரு வார முடிவில் பயிற்சி டெஸ்ட் போட்டிகளிலும் ஆடத் துவங்கி உள்ளனர்.
இதற்குத்தான் இத்தனை வீரர்களா?
இதற்குத் தான் இந்திய அணியில் மூன்று அணிகளையும் சேர்த்து 24 வீரர்களுக்கும் மேல் இருக்குமாறு பார்த்து அணித் தேர்வு செய்துள்ளது பிசிசிஐ. இதன் மூலம், இந்திய வீரர்கள் தங்களுக்குள்ளே இரு அணிகளை பிரித்துக் கொண்டு பயிற்சி செய்ய முடியும்.