மும்பை: இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் வாஷிங்டன் சுந்தர் தான் முதன்மை ஸ்பின்னர் என்று முடிவு செய்யப்பட்டால், அஸ்வின் மற்றும் ஜடேஜா இருவரையும் தேர்வு செய்ய தேவையில்லை என்று முன்னாள் வீரர் புஜாரா அறிவுறுத்தியுள்ளார்.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டிக்காக இந்திய அணி சிறப்பாக தயாராகி வருகிறது. பிங்க் பால் போட்டியை முன்னிட்டு பிரதமர் லெவன் அணியுடனான பயிற்சி போட்டியில் விளையாடி வரும் சூழலில், நட்சத்திர வீரர்களான பும்ரா, ரிஷப் பண்ட், ஜுரெல், விராட் கோலி, அஸ்வின் உள்ளிட்டோருக்கு ஓய்வு கொடுத்துள்ளது.

இதனிடையே முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் அஸ்வின் மற்றும் ஜடேஜா இருவரும் சேர்க்கப்படவில்லை. இதனால் அடுத்த டெஸ்ட் போட்டியில் இருவருக்கும் வாய்ப்பு கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து இந்திய அணியின் சீனியர் வீரரான புஜாரா பேசுகையில், அஸ்வின் மற்றும் ஜடேஜாவின் தரத்தில் மீண்டும் எந்த வீரர்களும் கிடைக்க மாட்டார்கள்.
இந்திய உள்ளூர் கிரிக்கெட்டில் ஏராளமான ஸ்பின்னர்களை எதிர்த்து விளையாடி வருகிறேன். ஆனால் அவர்களுக்கு நிகரான வீரர்கள், சரியான மாற்று வீரர்கள் இல்லை என்பதே உண்மை. சில இளம் வீரர்கள் இருந்தாலும், அவர்களை கண்டறிந்து இன்னும் தயார் செய்ய வேண்டிய நிலை இருக்கிறது. அவர்கள் இருவரும் ஜாம்பவான் வீரர்கள். இருவருக்கும் நிகரான வீரர்களை கண்டறிய முடியாது என்று நினைக்கிறேன்.
இரு வீரர்களுக்குமான மாற்று வீரர்கள் இருந்தாலும், அவர்கள் அளவிற்கு வேறு யாரும் இந்திய அணிக்கு பங்களித்ததில்லை. இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கு பின் இந்திய அணி இங்கிலாந்துக்கு பயணிக்க உள்ளது. அங்கு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கவுள்ளது. அந்த அணியில் அஸ்வின் மற்றும் ஜடேஜா இருவரில் ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்குமா என்ற கேள்வி உள்ளது.
ஒருவேளை அஸ்வின், ஜடேஜா இல்லாமல் வாஷிங்டன் சுந்தர் பிளேயிங் லெவனில் இடம்பெற வாய்ப்புள்ளது. வாஷிங்டன் சுந்தர் தான் இடம்பெற வாய்ப்பு இருக்கிறது என்றால், 2 வீரர்களுக்கு பதிலாக வேறு வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கலாம் என்று தெரிவித்துள்ளார். கடந்த முறை இங்கிலாந்து பயணித்த போது, அஸ்வின் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை.
ஜடேஜாவுக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கப்பட்டது. இம்முறை வாஷிங்டன் சுந்தர் இடதுகை பேட்ஸ்மேன் மற்றும் ஆஃப் ஸ்பின்னர் என்று இரு ரோலையும் செய்ய முடியும் என்பதால், அவருக்கே வாய்ப்பு கிடைக்கும் என்பது கிட்டத்தட்ட உறுதி தான். இதனால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கு பின் அஸ்வின், ஜடேஜா இருவரும் இந்திய அணியில் இருந்து வெளியேற்றப்பட வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது.