ஆஸ்திரேலியா தெளிவான முடிவு
இரண்டாவது டெஸ்ட் போட்டி நடந்த புதிய பெர்த் மைதானம் வேகப் பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என கூறப்பட்டது. ஆஸ்திரேலிய அணி இதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல், முதல் டெஸ்ட் போட்டியில் ஆடிய அதே 3 வேகம் + 1 சுழல் பந்துவீச்சு கூட்டணியை களம் இறக்கியது.
நான்கு வேகம், சுழல் இல்லை
மாறாக இந்தியா நான்கு வேகப் பந்துவீச்சாளர்களோடு, ஒரு முழு நேர சுழற்பந்துவீச்சாளர் கூட இல்லாமல் களம் இறங்கியது. இந்திய அணி இப்படி முழு நேர சுழற் பந்துவீச்சாளர் இல்லாமல் களம் இறங்குவது வரலாற்றில் இது மூன்றாவது முறையாகும்.
சுழலில் சிக்கிய இந்தியா
இப்படி "வேற மாதிரி" யோசித்த இந்தியா இந்த டெஸ்டில் சரியாக அடி வாங்கியது. ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்துவீச்சாளர் லியோன் முதல் இன்னிங்க்ஸில் 5, இரண்டாம் இன்னிங்க்ஸில் 3 விக்கெட்கள் வீழ்த்தி அசத்தினார். இந்திய அணியில் ஹனுமா விஹாரி மட்டுமே சுழற் பந்து வீசினார். பகுதி நேர பந்துவீச்சாளரான இவரது சுழல் பெரிதாக எடுபடவில்லை. முதல் இன்னிங்க்ஸில் மட்டும் 2 விக்கெட்கள் வீழ்த்தினார்.
ஜடேஜா பற்றி யோசிக்கவே இல்லை
ஹனுமா விஹாரியை அணியில் சேர்த்ததற்கு பதில் ஜடேஜாவை சேர்த்து இருக்கலாம். தோல்விக்கு முழு நேர சுழற் பந்துவீச்சாளர் இல்லாததே காரணம் என கூறப்பட்டது. இந்த போட்டியின் தோல்விக்கு பின்னர் கோலி பேட்டி அளித்தார். அப்போது, "நாங்கள் இந்த பிட்ச்சை பார்த்த போது ஜடேஜாவை பற்றி யோசிக்கவே இல்லை. நான்கு வேகம் மட்டும் போதும் என நினைத்தோம். நாங்கள் உண்மையாகவே சுழல் பந்து வாய்ப்பு பற்றி யோசிக்கவே இல்லை" எனக் கூறினார்.
கோபத்தில் ரசிகர்கள்
கோலி நாங்கள் சுழற்பந்து வீச்சாளரை தேர்வு செய்யாமல் தவறு செய்து விட்டோம் என கூறி இருந்தால் கூட ரசிகர்கள் சற்று அமைதியாக இருந்திருப்பார்கள். ஆனால், முன்னணி பந்துவீச்சாளரான ஜடேஜாவை நாங்கள் யோசிக்கவே இல்லை எனக் கூறி இருப்பது அவர்களை மேலும் சூடேற்றி உள்ளது.