ராய்ப்பூர்: இந்திய அணியின் டி20 உலகக்கோப்பை தொடருக்கான பிசிசிஐ திட்டத்திற்குள் என்ன காரணத்திற்காக ஸ்ரேயாஸ் ஐயர் கொண்டு வரப்பட்டுள்ளார் என்பதை பார்க்கலாம்.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 4வது டி20 போட்டி இன்று இரவு தொடங்கவுள்ளது. இந்த போட்டியின் பிளேயிங் லெவனில் நட்சத்திர வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் களமிறங்க அதிக வாய்ப்புகள் உள்ளது. அதுமட்டுமல்லாமல் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டி20 தொடருக்கும் ஸ்ரேயாஸ் ஐயர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கடந்த டி20 உலகக்கோப்பை தொடருக்கு தேர்வாகாத ஸ்ரேயாஸ் ஐயர், அடுத்தடுத்து இரு டி20 தொடரில் தேர்வு செய்யப்பட்டிருப்பது ரசிகர்களிடையே கேள்வியை எழுப்பியுள்ளது. இதன் மூலம் டி20 உலகக்கோப்பை தொடருக்கான பிசிசிஐ திட்டத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் இருப்பது தெரிய வந்துள்ளது. அதற்கு ஸ்ரேயாஸ் ஐயரின் திறமையே முதன்மை காரணமாக அமைந்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளில் ஸ்ரேயாஸ் ஐயர் மிடில் ஆர்டரில் மிகச்சிறந்த வீரராக உருவெடுத்துள்ளார். உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரிலும் பல்வேறு தருணங்களில் அதிரடியாக விளையாடி இந்திய அணியின் ரன் குவிப்பை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றார். குறிப்பாக ஸ்பின்னர்களை வெளுப்பதில் ஸ்ரேயாஸ் ஐயர் மிகச்சிறந்த வீரராக உள்ளார்.
ஷார்ட் பால் பந்தில் ஆட்டமிழந்தாலும், அதனை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று தொடர்ந்து பயிற்சி மேற்கொண்டு வருகிறார். இதனால் அனைத்து வடிவங்களுக்குமான வீரராக ஸ்ரேயாஸ் ஐயர் பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் டி20 உலகக்கோப்பை தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடக்கவுள்ளது. அங்கு ஆடுகளங்கள் மித வேகத்தில் இருக்கும் என்பதோடு, ஸ்பின்னர்களுக்கும் சாதகமாக இருக்கும்.
அதனால் ருதுராஜ் கெய்க்வாட், சூர்யகுமார் யாதவ் ஆகியோருடன் சேர்ந்து ஸ்ரேயாஸ் ஐயர் களமிறங்கும் போது இந்திய அணியின் பேட்டிங் லைன் அப் கூடுதல் பலம்பெறும். இதன் காரணமாக டி20 உலகக்கோப்பை தொடரில் ஸ்ரேயாஸ் ஐயர் பிசிசிஐ திட்டத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளார். ஏற்கனவே ஆஸ்திரேலியா அணி ஸ்டீவ் ஸ்மித்தை தொடக்க வீரராக களமிறக்கி முயற்சிகளை மேற்கொண்டுள்ள நிலையில், இந்திய அணியும் ஆரம்ப பணிகளில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது.