மும்பை: சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி ஒதுங்கியதற்கான காரணங்கள் குறித்து பார்க்கலாம்.
சர்வதேச அளவில் இந்திய கிரிக்கெட்டின் முகமாக இருப்பவர் விராட் கோலி. என்னதான் ரோகித் சர்மா கேப்டனாக இருந்தாலும், ரசிகர்கள் பார்க்க விரும்புவது விராட் கோலியை தான். அந்த அளவிற்கு எந்த வடிவிலான கிரிக்கெட் என்றாலும் ஒற்றை ஆளாக களத்தில் இருந்து எதிரணியை வெளுத்து கட்டுவார் விராட் கோலி. சச்சினை போல் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மண்ணிலும் கூட ரசிகர்களை கொண்டவர்.

அப்படியான ஒரு வீரர் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மட்டுமே விளையாட விரும்பியுள்ளார். இதன் மூலம் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் இருந்து விராட் கோலி விலகுகிறாரா என்ற கேள்வியும் ரசிகர்களிடையே எழுந்துள்ளது. அண்மையில் முடிவடைந்த உலகக்கோப்பை தொடரின் தோல்வி காரணமாக, விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட்டை விளையாட விரும்பவில்லை.
ஆனால் 2025ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடப்பதால், நிச்சயம் விரைவில் ஒருநாள் கிரிக்கெட்டை மீண்டும் தொடங்குவார் என்று பார்க்கப்படுகிறது. ஆனால் டி20 உலகக்கோப்பை தொடருக்கு பின் விராட் கோலி இந்திய அணிக்காக ஒரு டி20 போட்டியில் கூட விளையாடவில்லை. அடுத்த ஆண்டு ஜூன் மாதம் டி20 உலகக்கோப்பை வெஸ்ட் இண்டீஸில் நடக்கவுள்ளது.
இருப்பினும் விராட் கோலி டி20 போட்டிகளில் விளையாட விருப்பம் தெரிவிக்காததன் மூலம், இனி அவர் டி20 போட்டிகளில் விளையாட வேண்டாம் என்று முடிவு செய்துள்ளதாகவே பார்க்கப்படுகிறது. 2007ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை தொடங்கிய போது, இளைஞர்களுக்கு வழிவிடும் வகையில் சச்சின் டெண்டுல்கர், கங்குலி, டிராவிட் உள்ளிட்டோர் டி20 போட்டிகளில் விளையாட போவதில்லை என்று விலகி கொண்டனர்.
அதேபோல் விராட் கோலியும் முடிவு செய்துள்ளதாக பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் தொடக்கம் முதலே விரார் கோலி டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டை தான் அதிக விருப்பத்துடன் விளையாடி வந்திருக்கிறார். இதன் அடுத்த 3 ஆண்டுகளுக்கு விராட் கோலியின் கவனம் முழுக்க டெஸ்ட் கிரிக்கெட்டில் தான் இருக்கும் என்று பார்க்கப்படுகிறது. இதனால் விராட் கோலி முடிவு ரசிகர்கள் மத்தியில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.