ராய்ப்பூர்: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 4வது டி20 போட்டியில் இந்திய அணியின் இளம் வீரரான திலக் வர்மாவுக்கு பதில் ஸ்ரேயாஸ் ஐயரை கொண்டு வந்தது பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 4வது டி20 ஆட்டம் ராய்ப்பூரில் தொடங்கியுள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி கேப்டன் மேத்யூ வேட் பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்த போட்டியில் இந்திய அணி சார்பாக இஷான் கிஷன், பிரசித் கிருஷ்ணா, திலக் வர்மா மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் நீக்கப்பட்டு ஸ்ரேயாஸ் ஐயர், ஜித்தேஷ் சர்மா, முகேஷ் குமார் மற்றும் தீபக் சஹர் ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.

வழக்கமாக ஐபிஎல் தொடருக்கு பின் திலக் வர்மா இந்திய அணி சார்பாக ஆடப்பட்ட அனைத்து டி20 போட்டிகளிலும் விளையாடி இருக்கிறார். 3, 4 மற்றும் 5 ஆகிய பேட்டிங் வரிசையில் சூழலுக்கு ஏற்றபடி விளையாட வைக்கப்பட்ட திலக் வர்மா, அதிரடியான ஃபார்மில் இருந்தார். அதேபோல் இடதுகை பேட்ஸ்மேன் என்பதோடு, எந்த பவுலராக இருந்தாலும் வெளுத்து கட்ட கூடிய வீரர்.
அதனை வெஸ்ட் இண்டீஸ் மண்ணிலேயே நிரூபித்துவிட்டார். அதுமட்டுமல்லாமல் இந்திய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களில் கொஞ்சம் கைகளை சுழற்றி பந்துவீசக் கூடிய ஒரே பேட்ஸ்மேனும் அவர் தான். ஏற்கனவே நன்றாக பந்துவீசி விக்கெட்டையும் வீழ்த்தி இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் மிடில் ஆர்டரில் விக்கெட் விழுந்தால் தடுத்தாட கூடிய பேட்ஸ்மேனாகவும் திலக் வர்மா இருந்து வந்தார்.
அதுமட்டுமல்லாமல் ஸ்ரேயாஸ் ஐயர் ஸ்பின்னர்கள் பொளந்து கட்டினாலும், வேகப்பந்துவீச்சாளர்களிடம் கொஞ்சம் தடுமாறுவார். ஆனால் திலக் வர்மா வேகப்பந்துவீச்சாளர், ஸ்பின்னர் என்று எந்த பாரபட்சமும் இருக்காது. அவரின் இடதுகை மணிக்கட்டை பயன்படுத்தி சிக்சர்களை பவுண்டரிகளை விளாசுவதில் வல்லவர் என்பதால், அவரை பிளேயிங் லெவனில் இருந்து நீக்கியிருக்க கூடாது என்று பார்க்கப்படுகிறது.
கடந்த சில போட்டிகளில் திலக் வர்மா பேட்டிங்கில் சொதப்பி இருந்தாலும், அவருக்கான வாய்ப்பை தொடர்ந்து பெறும் பட்சத்தில் மிகவும் அபாயகரமான பேட்ஸ்மேனாக இருப்பார். அதன் காரணமாகவே சஞ்சு சாம்சனை விடவும் ஆசிய கோப்பை தொடரில் திலக் வர்மாவை இந்திய அணி தேர்வு செய்தது குறிப்பிடத்தக்கது.