அடிலெய்டு: இந்திய அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் ட்ராவிஸ் ஹெட்டின் அபார சதத்தால் ஆஸ்திரேலியா அணி 337 ரன்கள் குவித்துள்ளது. இந்திய அணியின் நட்சத்திர பவுலர்களான ஜஸ்பிரிட் பும்ரா மற்றும் முகமது சிராஜ் இருவரும் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி அடிலெய்டு மைதானத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதல் பேட்டிங் ஆடிய இந்திய அணி 180 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகியது. இதன்பின் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 86 ரன்களை சேர்த்திருந்தது.

இதன்பின் 2வது நாள் ஆட்டத்தை மெக்ஸ்வீனி - லபுஷேன் இருவரும் தொடர்ந்தனர். இதன் முதல் செஷனில் பும்ராவின் வேகத்தில் மெக்ஸ்வீனி 39 ரன்களிலும், ஸ்டீவ் ஸ்மித் 2 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். மறுமுனையில் சிறப்பாக விளையாடி அரைசதம் கடந்த லபுஷேன் நிதீஷ் குமார் ரெட்டி பவுலிங்கில் 64 ரன்கள் எடுத்திருந்த போது ஆட்டமிழந்து வெளியேறினார்.
பின்னர் இணைந்த ட்ராவிஸ் ஹெட் - மிட்சல் மார்ஷ் கூட்டணி அதிரடியாக ரன்களை குவித்தது. இதில் மிட்சல் மார்ஷ் 9 ரன்களில் ஆட்டமிழக்க, ட்ராவிஸ் ஹெட் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்தார். மறுமுனையில் விக்கெட்டுகள் செல்வதை பற்றி கவலைப்படாமல் தனது ஆட்டத்தில் கவனமாக இருந்த ட்ராவிஸ் ஹெட் விரைவாக ரன்களை சேர்த்து ஆஸ்திரேலியா அணியின் ஸ்கோரை 300 ரன்களுக்கு மேல் கொண்டு சென்றார்.
சிறப்பாக ஆடி 111 பந்துகளில் தனது 8வது சதத்தை விளாசிய ட்ராவிஸ் ஹெட்டை வீழ்த்த முடியாமல், இந்திய பவுலர்கள் திண்டாடினர். பின்னர் புதிய பந்து இந்திய பவுலர்கள் கைகளுக்கு வந்தது. அப்போது பும்ரா மற்றும் சிராஜ் இருவரும் அட்டாக்கில் வந்தனர். அப்போது பும்ரா ஒரு பக்கம் ரன்களை நிறுத்த, சிராஜை அட்டாக் செய்ய தொடங்கினார். அதுவே அவரின் விக்கெட்டுக்கு காரணமாக அமைந்தது.
எதிர்பாராத வகையில் அட்டகாசமாக யார்க்கர் மூலம் ட்ராவிஸ் ஹெட் விக்கெட்டை 140 ரன்களில் வீழ்த்த, பின்னர் வந்த டெய்லண்டர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். இறுதியாக ஆஸ்திரேலியா அணி 87.3 ஓவர்களில் 337 ரன்கள் குவித்து ஆல் அவுட்டாகியது. இதன் மூலமாக ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்ஸிலேயே 157 ரன்கள் முன்னிலையை பெற்றுள்ளது. இந்திய அணி தரப்பில் பும்ரா, சிராஜ் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.