அகமதாபாத் : ஐசிசி உலக கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் 20 ஆண்டுகளுக்குப் பிறகு பல பரிட்சை நடத்துகிறது. கடந்த 2003 ஆம் ஆண்டு மோதிய போது ஆஸ்திரேலியா அணி அபார வெற்றியை பெற்றது.
இதற்கு பழி தீர்க்கும் முனைப்புடன் இந்திய அணி வீரர்கள் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் ஆட்டத்தில் களமிறங்குகின்றனர். இந்த நிலையில் இந்த போட்டியில் யார் வெல்வார் என்பது குறித்து ஆஸ்திரேலிய வீரர் மைக்கேல் பெவன் கருத்து தெரிவித்திருக்கிறார். அதனை தற்போது பார்க்கலாம்.

உலக கோப்பையில் யார் வெல்கிறார்கள் என்பதைவிட உலக கோப்பை இறுதிப் போட்டிக்கு வந்திருப்பதை நான் எப்போதும் மிகப்பெரிய சாதனையாக கருதுவேன். ஏனென்றால் இது போன்ற ஒரு நிகழ்வு எப்போதும் நடைபெறுவது இல்லை. நடப்பு உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இரண்டு பெரிய அணிகள் அவர்களுடைய டாப் ஃபார்மில் மோதுகிறார்கள்.
ஆஸ்திரேலிய அணியை பொறுத்தவரை திறமை வாய்ந்த வீரர்கள் பலர் இருக்கிறார்கள். மேலும் ஒரு போட்டியில் ஆட்டத்தையே மாற்றக்கூடிய வீரர்கள் ஆஸ்திரேலியா அணியில் இருக்கிறார்கள். என்னை பொறுத்தவரை ஆஸ்திரேலிய அணி இன்னும் தங்களுடைய பேட்டிங்கில் கவனம் செலுத்த வேண்டும். தற்போது பொறுத்தவரை உலக கோப்பையை வெல்ல இந்தியாவுக்கு தான் அதிக வாய்ப்பு இருக்கிறது.
ஆனால் ஆஸ்திரேலிய அணிக்கு உலக கோப்பை வெல்லும் திறமை இருக்கிறது. இந்த தொடரில் யார் டாஸ் வெல்கிறார்களோ அவர்கள் பேட்டிங் செய்வார்கள். ஆஸ்திரேலியா அணியும் பேட்டிங் செய்யக்கூடிய அணி தான். இந்த தொடரில் அவர்கள் முதலில் தோல்வியை தழுவினாலும், பிறகு தரமான ஒரு கம்பேக்கை கொடுத்திருக்கிறார்கள் என்று மைக்கேல் பெவன் கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து பேசிய இந்திய வீரர் அசோக் டிண்டா, இந்தியா இந்த தொடரில் தோல்வியை பெறாமல் விளையாடுகிறது. பேட்டிங் பந்துவீச்சு பில்டிங் என மூன்று பிரிவிலும் அவர்கள் நன்றாகவே செயல்பட்டு இருக்கிறார்கள். இந்த உலக கோப்பையில் இந்தியா வெல்லவே அதிக வாய்ப்பு இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.