அகமதாபாத் : ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இறுதி ஆட்டத்திலும் ஜெய்ஸ்ரீராம் கோஷம், எதிரொலித்தது உலகின் மிக பெரிய கிரிக்கெட் மைதானமான நரேந்திர மோடி மைதானத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தின் போது ஜெய் ஸ்ரீ ராம் கோஷம் எழுப்பப்பட்டது.
மேலும் பாகிஸ்தான் வீரர் முஹம்மது ரிஸ்வான் ஆட்டமிழந்து பெவிலியன் சென்றபோது ரசிகர்கள் சிலர் அவரை நோக்கி ஜெய்ஸ்ரீராம் கோஷம் எழுப்பியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் இறுதி போட்டி மீண்டும் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இம்முறை ஆஸ்திரேலியா தான் இறுதி போட்டியில் விளையாடுகிறது என்பதால் ரசிகர்களும் அமைதியாக தான் இருந்தார்கள். இந்த அமைதிக்கு பின்னால் இருக்கும் காரணம் இந்திய அணி வீரர்கள் யாரும் பெரிய ரன்களை எடுக்காமல் அடுத்தடுத்து ஆட்டம் இழந்ததுதான். இதன் மூலம் இந்தியா பெரிய இலக்கை தொட முடியாமல் தவித்து வந்தது.
இந்த நிலையில் ரசிகர்கள் சோர்வடைந்திருந்ததால் அப்போது மைதானத்தில் இருந்த டிஜே ஜெய்ஸ்ரீராம் பாடலை ஒலிபரப்பினார். அப்போது ரசிகர்கள் உற்சாகமடைந்து ஜெய்ஸ்ரீராம் என்று முழக்கங்களை எழுப்பினர். ஆனால் இந்திய அணி குறைந்த ரன்களை அடித்திருந்ததால் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இருந்தது போல் ஒட்டுமொத்த மைதானமும் ஜெய் ஸ்ரீ ராம் கோஷத்தை எழுப்பவில்லை.
இந்தியா விளையாடும் அனைத்து போட்டிகளிலுமே ஜெய் ஹோ அல்லது வந்தே மாதரம் போன்ற பாடல்கள் தான் ஒலிக்கப்படும். மேலும் ரசிகர்களும் வந்தே மாதரம் பாடல்களை பாடுவார்கள். ஆனால் அகமதாபாத்தில் மட்டும்தான் தொடர்ந்து மத ரீதியான ஜெய் ஸ்ரீ ராம் பாடல்கள் ஒளிபரப்பப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.