மும்பை : 2023 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தவறான நேரத்தில், பவுண்டரி அடிக்க ஆசைப்பட்டு தன் விக்கெட்டை பறி கொடுத்தார். அது கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. .
இந்த நிலையில், பேட்டி ஒன்றில் அது குறித்து கேள்வி கேட்கப்பட்ட போது அதைப் பற்றி ஏன் பேச வேண்டும்? ரோஹித் சர்மம் மீது மட்டும் குறை சொல்லத் தேவையில்லை. அவர் அவுட் ஆக ட்ராவிஸ் ஹெட்டும் ஒரு முக்கிய காரணம் என குறிப்பிட்டார் கெவின் பீட்டர்சன்.
2023 ஒருநாள் போட்டி உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதின. அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 240 ரன்கள் மட்டுமே எடுத்தது. அடுத்து பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா எளிதாக சேஸிங் செய்து வென்று, உலகக்கோப்பையை வென்றது.

இந்தப் போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்த போது அதிக பவுண்டரி அடித்த ஒரே வீரர் ரோஹித் சர்மா மட்டுமே. அவர் துவக்கம் முதலே அதிரடி பேட்டிங் ஆடி வந்த நிலையில், மற்றொரு துவக்க வீரர் சுப்மன் கில் 4 ரன்களில் ஆட்டமிழந்து இருந்தார்.
விக்கெட் விழுந்ததால் சற்று நிதானித்து ஆடுவார் என எதிர்பார்த்தால் அப்போதும் அதிரடி ஆட்டம் ஆடினார் ரோஹித் சர்மா. ஒரு கட்டத்தில் கிளென் மேக்ஸ்வெல் ஓவரில் இரண்டு பவுண்டரி அடித்த ரோஹித் சர்மா, அதே ஓவரில் மூன்றாவது பவுண்டரியும் அடித்து விட வேண்டும் என ஆசைப்பட்டு பந்தை தூக்கி அடித்தார். கடினமான அந்த கேட்சை ட்ராவிஸ் ஹெட் ஓடிச் சென்று பிடிக்கவே, ரோஹித் ஆட்டமிழந்தார்.
அந்த ஓவரில் இரண்டு பவுண்டரி அடித்த ரோஹித் சர்மா, அதன் பின் சற்று நிதானம் காட்டி ஆடி இருக்கலாம். பவுண்டரி அடித்தே ஆக வேண்டும் என எந்த கட்டாயமும் இல்லாமல் அவர் தவறான ஷாட் ஆடி விட்டார் என முன்னாள் வீரர்கள் பலர் கூறினர்.
இந்த நிலையில், அது பற்றிய கேள்விக்கு பதில் அளித்த முன்னாள் இங்கிலாந்து வீரர் கெவின் பீட்டர்சன், ரோஹித் சர்மா அடித்த ஷாட்டை பற்றி நாம் ஏன் பேச வேண்டும். அவர் அவுட் ஆன அந்த கேட்ச் அற்புதமானது. ட்ராவிஸ் ஹெட் மிக அற்புதமாக அந்த கேட்ச்சை பிடித்தார். அதை நாம் பாராட்டுவோம் என்றார்.