மும்பை : 2023 ஒருநாள் போட்டி உலகக்கோப்பை தொடரின் இறுதிப் போட்டி பிட்ச் குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) சராசரியானது என மதிப்பீடு அளித்துள்ளது.
ஆஸ்திரேலிய அணியிடம், இந்திய அணி உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்ததற்கு போட்டி நடந்த அகமதாபாத் பிட்ச் மோசமாக தயாரிக்கப்பட்டது தான் காரணம் என விமர்சனம் எழுந்து இருந்தது. தற்போது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அதை உறுதி செய்யும் விதமாக அந்த பிட்ச் சராசரியாகவே இருந்தது என மதிப்பீடு அளித்துள்ளது.

அதே போல, ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதிய அரை இறுதி ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற நிலையில், அந்த பிட்ச்சும் சராசரியானது என ஐசிசி கூறி உள்ளது.
2023 உலகக்கோப்பை தொடரை இந்தியா நடத்தினாலும் ஐசிசி அந்த தொடர் தங்களின் விதிமுறைகளை பின்பற்றி நடக்கிறதா என அறிக்கை சமர்ப்பிக்கும். அதன் ஒரு பகுதியாக போட்டி நடந்த பிட்ச்கள் குறித்து மதிப்பீடு செய்யப்படும். அதில் இந்தியா ஆடிய 11 போட்டிகளில், 5 போட்டிகள் சராசரியான பிட்ச்களில் நடந்துள்ளதாக ஐசிசி கூறி உள்ளது.
ஏற்கனவே, பிசிசிஐ இந்திய அணி ஆடும் போட்டிகள் நடந்த பிட்ச்களில் மாற்றம் செய்கிறது என பிற நாட்டு ஊடகங்கள் விமர்சனம் செய்த நிலையில் இந்த பிட்ச் மதிப்பீடு வெளியாகி உள்ளது. இந்திய அணிக்கு ஏற்ற பிட்ச் தயாரிக்கப்பட்டது என்பது உண்மை என்றால், அதே விஷயம் தான் இந்திய அணிக்கு பாதிப்பாக மாறி இறுதிப் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்ததற்கும் காரணமாக அமைந்திருக்க வேண்டும்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்து 240 ரன்கள் மட்டுமே எடுத்தது. முதல் பாதியில் பிட்ச் பேட்டிங் செய்ய ஒத்துழைக்கவில்லை என கூறப்பட்டது. ஆனால், இரண்டாவதாக ஆஸ்திரேலியா சேஸிங் செய்த போது ஓரளவு பிட்ச் பேட்டிங்கிற்கு ஒத்துழைத்ததாக கூறப்பட்டது. இந்தியாவின் உலகக்கோப்பை தோல்விக்கு பிட்ச் தான் காரணம் என முன்னாள் வீரர்கள் கூறி வந்த நிலையில், ஐசிசி அறிக்கையும் அதை உறுதி செய்துள்ளது.
பிட்ச் தயாரிப்பு குறித்து பிசிசிஐ விசாரணை செய்யுமா? அல்லது பிசிசிஐ மற்றும் இந்திய அணி நிர்வாகம் தான் அந்த பிட்ச்சை இப்படி தயார் செய்ய சொன்னதா?