அகமதாபாத் : 2023 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்ள இருக்கும் இந்திய அணியில் ஒரே ஒரு பலவீனம் மட்டுமே உள்ளது.
அதைத் தான் ஆஸ்திரேலிய அணியும் குறி வைக்கும் என்பதால், அதை தவிர்க்க இந்திய அணி இப்போதே தன்னை தயார் படுத்திக் கொள்ள வேண்டிய நிலையில் உள்ளது.

இந்திய அணியில் பேட்டிங்கை பொறுத்தவரை முதல் ஐந்து பேட்ஸ்மேன்கள் மிக சிறப்பாக செயல்பட்டு உள்ளனர். ரோஹித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கே எல் ராகுல் ஆகியோர் இதுவரை சிறப்பாக ஆடி ரன் குவித்து இருக்கிறார்கள்.
ஆனால், அதிகம் பேட்டிங் வாய்ப்பை பெறாத இருவர், லோயர் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஆன சூர்யகுமார் யாதவ் மற்றும் ஆல் - ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா. அவர்களுக்கு சில போட்டிகளில், சில பந்துகள் மட்டுமே பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பில் அவர்கள் சிறப்பாக செயல்பட்டு இருந்தாலும், நீண்ட நேரம் களத்தில் நின்று ஆட வேண்டி வந்தால் அவர்கள் தாக்குப் பிடித்து ஆடுவார்களா? என்ற சந்தேகம் உள்ளது.
ஆஸ்திரேலியா ஒருவேளை இந்திய அணியின் முதல் நான்கு விக்கெட்களை விரைவாக வீழ்த்தி விட்டால் இந்திய அணிக்கு பெரிய சிக்கல் ஆரம்பிக்கும். சூர்யகுமார் யாதவ் அல்லது ஜடேஜா விரைவில் களத்துக்கு வந்து நீண்ட நேரம் பேட்டிங் ஆட வேண்டி இருக்கும். அவர்கள் நன்றாக ஆடினால் இந்திய அணிக்கு சாதகம் தான். ஆனால், சொதப்பிவிட்டால்?
அதனால், இந்திய அணி வழக்கம் போல விராட் கோலியை நிதான ஆட்டம் ஆடச் செய்து விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அப்போது தான் சூர்யகுமார் யாதவ், ஜடேஜா ஆகியோர் களத்திற்கு விரைவில் வந்தாலும், கோலி ஒரு புறம் நிற்க அவர்களால் அதிரடி ஆட்டம் ஆட முடியும். அப்படி நடந்தால் அது ஆஸ்திரேலிய அணிக்கு பாதிப்பாக மாறும்.