பிரிஸ்பேன்: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஜெய்ஸ்வால் இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ் பேட்டிங்கில் சொதப்பினார். இந்த டெஸ்ட் தொடரில் இதுவரை நடந்த மூன்று டெஸ்ட் போட்டிகளின் முதல் இன்னிங்ஸிலும் ஜெய்ஸ்வால் மிட்செல் ஸ்டார்க்-கிடம் தனது விக்கெட்டை இழந்து இருக்கிறார்.
இந்த தொடரின் முதல் போட்டியில் முதல் இன்னிங்க்ஸில் ஸ்டார்க் பந்துவீச்சில் டக் அவுட் ஆகி இருந்த ஜெய்ஸ்வால், இரண்டாவது இன்னிங்க்ஸின் போது ஸ்டார்க் வேகமாக பந்து வீசவில்லை எனக் கூறி வம்பிழுத்து இருந்தார். அனுபவம் மிக்க, உலகின் முன்னணி வேகப் பந்துவீச்சாளரான மிட்செல் ஸ்டார்க்கை ஜெய்ஸ்வால் சீண்டியதோடு 161 ரன்கள் எடுத்து கெத்து காட்டி இருந்தார்.

ஆனால், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அதே ஸ்டார்க்கிடம் தான் சந்தித்த முதல் பந்திலேயே டக் அவுட் ஆகி இருந்தார் ஜெய்ஸ்வால். தற்போது மீண்டும் அதே மிட்செல் ஸ்டார்க்கிடம் மூன்றாவது போட்டியின் முதல் இன்னிங்ஸில் 4 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்து இருக்கிறார். இதை அடுத்து ஜெய்ஸ்வால் மீது கடும் விமர்சனம் எழுந்து உள்ளது.
சமூக வலைதளங்களில் ரசிகர்கள் அவரை விளாசி வருகின்றனர். "வாய்சவடால்" விடும் முன் உலகின் சிறந்த ஸ்விங் பவுலர்களில் ஒருவரான மிட்செல் ஸ்டார்க் பந்து வீச்சில் எப்படி கவனமாக ஆடுவது? என்பது பற்றி அவர் தெரிந்து கொள்ள வேண்டும் என ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.
மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்து 445 ரன்கள் எடுத்தது. இந்த நிலையில், இந்திய அணி 400 ரன்களாவது எடுத்தால் தான் இந்த போட்டியை டிரா செய்யவோ அல்லது வெற்றி பெறவோ முடியும் என்ற சூழ்நிலை உள்ளது. இந்த நிலையில், இதற்கு முந்தைய இரண்டு போட்டிகளிலும் முதல் இன்னிங்ஸில் மிட்செல் ஸ்டார்க் பந்துவீச்சில் தனது விக்கெட்டை இழந்த ஜெய்ஸ்வால், இந்த போட்டியில் ஒரு தவறை செய்தார்.
அதாவது முதல் ஓவரின் முதல் பந்தில் தானே ஸ்ட்ரைக்கை சந்திப்பேன் என அவர் முடிவு செய்தார். பொதுவாக முதல் ஓவரிலேயே அடிக்கடி ஆட்டம் இழக்கும் துவக்க வீரர் மற்ற துவக்க வீரரை ஸ்ட்ரைக்கை முதலில் எடுத்துக் கொள்ளுமாறு கூறுவார். அதன்படி கே எல் ராகுலை முதல் பந்தை சந்திக்குமாறு ஜெய்ஸ்வால் கூறி இருக்கலாம்.
ஆனால், முதல் ஓவரை மிட்செல் ஸ்டார்க் தான் வீசப் போகிறார் என்பது தெரிந்தும் ஜெய்ஸ்வால் தில்லாக முதல் பந்தை சந்தித்தார். முதல் பந்திலேயே ஃபோர் அடித்து மிட்செல் ஸ்டார்க்-குக்கு பதிலடி கொடுப்பது போல செயல்பட்டார். ஆனால், இரண்டாவது பந்திலேயே அவர் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார்.
இரண்டாவது பந்தை அவர் அடித்தது பற்றியும் ஒரு பின்னணி உள்ளது. மிட்செல் ஸ்டார்க் வீசும் ஸ்விங் பந்தை அடிப்பதற்காக ஜெய்ஸ்வால் வலைப் பயிற்சியில் தனிப்பட்ட பயிற்சியை மேற்கொண்டு வந்தார். அங்கு பயிற்சி செய்த அதே ஷாட்டை தான் இரண்டாவது பந்தில் பயன்படுத்தி இருந்தார் ஜெயஸ்வால். ஆனால், ஃபீல்டர் நிற்பதை பற்றி கண்டுகொள்ளாமல் அதே ஷாட்டை அவர் ஆடினார். அதன் விளைவாக அவர் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். இரண்டு பந்துகளில் நான்கு ரன்கள் மட்டும் எடுத்த ஜெய்ஸ்வால் இன்னிங்ஸின் இரண்டாவது பந்திலேயே ஆட்டம் இழந்து வெளியேறினார்.