அடிலெய்டு: இந்திய டெஸ்ட் அணியின் துவக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சர்வதேச கிரிக்கெட்டில் இப்போது தான் தனது இரண்டாவது ஆண்டில் காலடி எடுத்து வைத்து இருக்கிறார். அதற்குள் சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி, வீரேந்தர் சேவாக் போன்ற ஜாம்பவான்கள் பல ஆண்டுகள் கிரிக்கெட் ஆடி செய்த சாதனை ஒன்றை முறியடிக்க இருக்கிறார்.
2023 ஜூலை மாதத்தில் தான் ஜெய்ஸ்வால் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம் ஆனார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 171 ரன்கள் குவித்து தனது முதல் இன்னிங்ஸிலேயே முத்திரை பதித்தார். அடுத்து 2024 ஆம் ஆண்டில் மட்டும் மூன்று முறை 150க்கும் மேற்பட்ட ரன்களை சேர்த்து இருக்கிறார்.

இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அடுத்தடுத்த போட்டிகளில் இரண்டு இரட்டை சதங்களை அடித்த அவர், ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக தற்போது நடைபெற்று வரும் பார்டர் - கவாஸ்கர் ட்ராபி தொடரின் முதல் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் 161 ரன்கள் குவித்தார்.
இதன் மூலம் 2024 ஆம் ஆண்டு மட்டும் மூன்று முறை 150க்கும் மேற்பட்ட ஸ்கோரை அவர் எடுத்து இருக்கிறார். இதுவரை இந்திய பேட்ஸ்மேன் ஒருவர் ஒரே ஆண்டில் மூன்று அல்லது அதற்கும் மேற்பட்ட முறை டெஸ்ட் இன்னிங்ஸில் 150க்கும் மேற்பட்ட ஸ்கோர்களை எடுத்த நிகழ்வு ஏழு முறை நடந்துள்ளது.
இதில் விராட் கோலி 2016இல் நான்கு முறை 150க்கும் மேற்பட்ட ஸ்கோர்களை எடுத்து இருந்தார். மற்ற ஆறு முறைகளில் சச்சின் டெண்டுல்கர் இரு முறையும் (2002, 2006), வீரேந்தர் சேவாக் இரு முறையும் (2004, 2008), விராட் கோலி ஒரு முறையும் (2017)ம் ஜெய்ஸ்வால் ஒரு முறையும் (2024) ஒரே ஆண்டில் மூன்று முறை 150க்கும் மேற்பட்ட ஸ்கோர்களை டெஸ்ட் இன்னிங்க்ஸ்களில் எடுத்து உள்ளனர்.
தற்போது சச்சின், சேவாக், மற்றும் விராட் கோலி ஆகியோரின் சாதனைகளை சமன் செய்து இருக்கும் ஜெய்ஸ்வால் தற்போது நடந்து வரும் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரின் நான்காவது போட்டிக்குள் மேலும் ஒரு 150க்கும் மேற்பட்ட ஸ்கோரை எடுத்தால், மொத்தமாக நான்கு 150 ஸ்கோர்களை பெற்று இந்தப் பட்டியலில் சச்சின், சேவாக் சாதனைகளை முறியடிப்பதோடு விராட் கோலியுடன் முதல் இடத்தை பகிர்ந்து கொள்வார்.