சாஹலுக்கு வாய்ப்பு
இந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஆன மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்தியா அணியில் சில மாற்றங்களை செய்தது. அதில் ஒன்றாக முதல் இரண்டு போட்டிகளில் வாய்ப்பு பெற்ற குல்தீப் யாதவுக்கு பதிலாக சாஹல் அணியில் இடம் பெற்றார்.
அதிக விக்கெட் வீழ்த்திய சாதனை
சாஹல் தன்னை அணியில் எடுத்தது சரிதான் என நிரூபிக்கும் வகையில் இந்த போட்டியில் 6 விக்கெட்கள் வீழ்த்தி ஆஸ்திரேலிய அணியை திணற வைத்தார். ஆஸ்திரேலிய மண்ணில் ஒருநாள் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்திய சுழற் பந்துவீச்சாளர் என்ற சாதனையையும் இதன் மூலம் செய்துள்ளார்.
மிடில் ஆர்டர் காலி
சாஹல் இந்த போட்டியில் தான் வீசிய முதல் ஓவரிலேயே கவாஜா, மார்ஷ் என 2 விக்கெட்கள் எடுத்து அதிர வைத்தார். தொடர்ந்து மிடில் ஆர்டரை மொத்தமாக வீழ்த்தி 6 விக்கெட்கள் எடுத்தார்.
இதற்கு முன்
ஆஸ்திரேலிய மண்ணில் சுழற் பந்துவீச்சாளர்கள் ஒரே ஒருநாள் போட்டியில் எடுத்த அதிகபட்ச விக்கெட்கள் ஐந்து தான். இதை ஏழு பந்துவீச்சாளர்கள் செய்துள்ளனர். இதில் இந்திய அணியின் தற்போதைய பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும் ஒருவர்.
ஷேன் வார்னே கூட கிடையாது
அதே போல, ஆஸ்திரேலிய மண்ணின் மைந்தன் ஷேன் வார்னேவும் ஒருநாள் போட்டிகளில் அதிகபட்சமாக 5 விக்கெட்களே வீழ்த்தி உள்ளார். இந்த நிலையில், சாஹல் 6 விக்கெட் வீழ்த்தி உலக சாதனை நிகழ்த்தி ஆச்சரியப்படுத்தி உள்ளார்.
குல்தீப் யாதவ் சறுக்கல்
இந்திய அணியில் குல்தீப் யாதவ் மட்டுமே விருப்பமான சுழற் பந்துவீச்சாளராக இருந்தார். அவரும் அதற்கேற்ப போட்டிக்கு போட்டி விக்கெட்களை அள்ளி வந்தார். ஆனால், ஆஸ்திரேலிய மண்ணில் அவரால் விக்கெட்களை வீழ்த்த முடியவில்லை. மேலும், ரன்னை கட்டுப்படுத்துவதிலும் திணறி வந்தார்.
யாருக்கு இடம்?
அவருக்கு பதிலாக அணியில் இடம் பிடித்த சாஹல் தற்போது அதிரடியாக 6 விக்கெட்கள் வீழ்த்தி அணியில் தனக்கும் நிரந்தர இடம் வேண்டும் என துண்டு போட்டுள்ளார். இனி வரும் போட்டிகளில் கேப்டன் கோலி யாரை தேர்வு செய்வார் என பார்க்கலாம்.