குவாலியர் : வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் கைப்பற்றியது. தற்போது டி20 தொடர் நாளை ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது. முதல் டி20 போட்டி மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் நடைபெறுகிறது.
குவாலியரில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட் போட்டி திரும்பி இருக்கிறது. கடைசியாக இந்தியா இங்கு விளையாடிய போது சச்சின் டெண்டுல்கர் ஒரு நாள் கிரிக்கெட்டில் இரட்டை சதம் அடித்தார் ஆனால் அது வேறு மைதானம் .

தற்போது குவாலியரில் கட்டப்பட்டிருக்கும் புதிய கிரிக்கெட் மைதானத்தில் தான் இந்த போட்டி நடைபெற இருக்கிறது. புதிய மைதானம் என்பதால் ஆடுகளம் எவ்வாறு இருக்கும்? எவ்வாறு செயல்படும் என்பதை தற்போது பார்க்கலாம். இந்த புதிய கிரிக்கெட் மைதானத்தில் ஜூன் மாதம் மட்டும் 12 டி20 போட்டிகள் நடைபெற்றிருக்கிறது. இதில் நான்கு முறை ஒரு இன்னிங்ஸில் 200 ரன்களுக்கு மேல் அடிக்கப்பட்டிருக்கிறது.
இதனால் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் போட்டியின் ஆடுகளம் ரன் குவிப்புக்கு சாதகமாக தான் இருக்கும் என தெரிகிறது. இந்த புதிய மைதானத்தில் நடைபெற்ற எம் பிஎல் தொடரில் குவாலியர் அணி 193 ரன்களை இலக்காக நிர்ணயிக்க, அதனை மால்வா பாந்தர்ஸ் அணி ஒரு பந்து எஞ்சிய நிலையில் வென்றது.
இதைப் போன்று இந்த மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் ஜபல்பூர் அணி 249 ரன்கள் குவிக்க இரண்டாவதாக பேட்டிங் செய்த போபால் அணி 216 ரன்கள் தான் எடுத்தது. ஆடுகளம் ரன் குவிப்புக்கு சாதகமாக ஒரே மாதிரியே இருக்கும் என்பதால் டாஸ் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது. எனினும் முதலில் பேட்டிங் செய்து 200 ரன்களுக்கு மேல் நிர்ணயித்தால் அதனை சேசிங் செய்வது கொஞ்சம் கடினமாக இருக்கும்.
ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருப்பதால் இரண்டு சுழற் பந்துவீச்சாளர் பிளஸ் ஒரு ஆல்ரவுண்டர் சுழற் பந்துவீச்சாளர் வைத்து களமிறங்குவதா இல்லை அதிக அளவு வேகப்பந்துவீச்சாளர்களை வைத்து களமிறங்குவதா என்ற குழப்பம் இந்திய அணி நிர்வாகத்திற்கு இருக்கின்றது. இந்த நிலையில் இந்த போட்டி அக்டோபர் ஆறாம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 7 மணிக்கு தொடங்கும். இந்த போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக பயிற்சி செய்து வருகின்றனர்.