மும்பை : ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு வங்கதேசம் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு டெஸ்ட் மற்றும் 3 ஒரு நாள் போட்டி கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்த தொடருக்கான இரண்டு அணிகளும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில் முதல் டெஸ்ட் போட்டி வரும் 19ஆம் தேதி வியாழக்கிழமை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்தப் போட்டிக்கான டாஸ் சரியாக 9:00 மணிக்கு வீசப்படும். இதனை தொடர்ந்து 9:30 மணிக்கு ஆட்டம் தொடங்கப்படும்.

முதல் டெஸ்ட் செப்டம்பர் 19ஆம் தேதி சென்னையில் நடைபெறுகிறது. இரண்டாவது டெஸ்ட் செப்டம்பர் 27ஆம் தேதி கான்பூரில் நடக்கிறது. இதனை தொடர்ந்து அக்டோபர் 6,9 மற்றும் 12ஆம் தேதி வங்கதேசத்துக்கு எதிராக மூன்று டி20 போட்டிகள் முறையே குவாலியர், டெல்லி மற்றும் ஹைதராபாத்தில் நடைபெறுகிறது. இந்தத் தொடரில் பெரிய அணி மோதவில்லை என்பதால் சுமாராக இருக்கும் என நீங்கள் நினைத்தால் அந்த எண்ணத்தை உடனடியாக மாற்றிக் கொள்ளுங்கள்.
ஏனென்றால் வங்கதேச அணி தற்போது புத்துயிர் பெற்று சிறப்பாக விளையாடி வருகிறது. அண்மையில் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு தொடர்ந்து இரண்டு டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்திருக்கிறது. தற்போது அதே பலத்துடன் இந்தியாவை எதிர்கொள்கிறது. அதே சமயம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்திய அணி தகுதி பெற வேண்டும் என்றால் ஐந்து போட்டிகளில் குறைந்தபட்சம் வெற்றி பெற வேண்டும்.
இதில் வங்கதேசத்துக்கு எதிரான இரண்டு டெஸ்ட், நியூசிலாந்துக்கு எதிரான மூன்று டெஸ்ட் சொந்த மண்ணில் நடைபெறுகிறது. அடுத்த ஐந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாட இந்தியா ஆஸ்திரேலியா செல்ல வேண்டும். ஆஸ்திரேலியா பயணம் மிகவும் கடுமையாக இருக்கும் என்பதால் இந்தியாவில் நடைபெறும் அடுத்த ஐந்து டெஸ்ட் போட்டியில் ரோகித் தலைமையிலான அணி வெற்றி பெற வேண்டும்.
இதனால்தான் வங்கதேச போட்டி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அது மட்டுமல்லாமல் விராட் கோலி கடந்த எட்டு மாதத்திற்கு பிறகு தற்போது சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் திரும்பி இருக்கிறார். கடைசியாக தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் விராட் கோலி பங்கு பெற்றார். ஆனால் அதன் பிறகு இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் விளையாடிய போது அதில் விராட் கோலி இல்லை.
மேலும் பும்ரா டி20 உலக கோப்பை தொடரில் வெற்றி பெற்ற பிறகு தற்போது தான் சர்வதேச கிரிக்கெட்டுக்கு திரும்பி இருக்கிறார். அதேபோன்று இந்திய அணியின் ஸ்டார் வீரரான ரிஷப் பண்ட் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு திரும்பி இருக்கிறார். இதனால் தான் இந்த போட்டி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
எனினும் இந்தியா விளையாடும் போட்டிகளை நாம் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் டிஸ்னி ஹாட்ஸ்டாரிலும் பார்த்து பழகி இருப்போம். ஆனால் கடந்த உலக கோப்பை தொடருக்கு முன்பே இந்தியாவில் நடைபெறும் போட்டிகளில் ஒளிபரப்பும் உரிமையை ஜியோ நிறுவனம் கைப்பற்றி விட்டது. இதனால் வங்கதேசத்துக்கு எதிரான போட்டி மற்றும் இந்தியா சொந்த மண்ணில் விளையாடும் அனைத்து போட்டிகளும் இனி தொலைக்காட்சிகளில் ஸ்போர்ட்ஸ் 18 சேனலில் பார்க்கலாம். ஆன்லைனில் ஜியோ சினிமாவில் இலவசமாக பார்க்கலாம்.