டாக்கா: இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர் நடைபெறுமா என்ற சந்தேகம் நீடித்து வந்த நிலையில், தற்போது அதற்கான சாதகமான சூழல் உருவாகியுள்ளது. இந்திய அணியின் வருகைக்காக வங்கதேச கிரிக்கெட் வாரியம் ஒரு மிகப்பெரிய தியாகத்தைச் செய்துள்ளது. 2026 செப்டம்பர் மாதம் நடைபெறவிருந்த அயர்லாந்து சுற்றுப்பயணத்தை ரத்து செய்துவிட்டு, இந்திய அணியை வரவேற்க வங்கதேசம் தயாராகி வருகிறது.
வங்கதேச அணிக்கு அயர்லாந்துடன் விளையாடுவதை விட இந்தியாவுடன் விளையாடுவதே வணிக ரீதியாக அதிக லாபத்தைத் தரும். அதுமட்டுமின்றி, 2027 ஒருநாள் உலகக்கோப்பைக்கு நேரடியாகத் தகுதி பெற தரவரிசையில் முன்னேறுவது வங்கதேசத்திற்கு அவசியமானது. தற்போது 79 புள்ளிகளுடன் 9 ஆவது இடத்தில் உள்ள வங்கதேசம், மார்ச் 2027 க்குள் முதல் 8 இடங்களுக்குள் வர வேண்டும். இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் வெற்றி பெற்றால் அவர்களுக்குத் தேவையான தரவரிசைப் புள்ளிகள் கிடைக்கும்.

முதல் ஒருநாள் போட்டி - செப்டம்பர் 1
2 வது ஒருநாள் போட்டி - செப்டம்பர் 3
3 வது ஒருநாள் போட்டி - செப்டம்பர் 6
முதல் டி20 போட்டி - செப்டம்பர் 9
2 வது டி20 போட்டி - செப்டம்பர் 12
3 வது டி20 போட்டி - செப்டம்பர் 13
இந்தத் தொடர் உண்மையில் 2025 இலேயே நடைபெற வேண்டியது. ஆனால் இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் அரசியல் சூழல் மற்றும் பாதுகாப்பு காரணங்களால் தள்ளிப்போனது. அதன் பின்னர் 2026 டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாட இந்தியா வர முடியாது என வங்கதேச அரசு பிரச்சனை செய்தது. அதனால் இந்தியா - வங்கதேசம் இடையிலான கிரிக்கெட் உறவு முற்றிலும் மோசமான நிலையில் இருந்தது. ஆனால், தற்போது நிலைமை தலைகீழாக மாறி உள்ளது.
தற்போது இந்தியா - வங்கதேச கிரிக்கெட் தொடர் 2026 செப்டம்பர் மாதத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. வங்கதேச கிரிக்கெட் வாரியம் தேதிகளை அறிவித்துவிட்டாலும், இந்திய அரசின் அனுமதி கிடைத்தால் மட்டுமே இந்திய அணி அந்நாட்டிற்குப் பயணம் மேற்கொள்ளும். ஒருவேளை அனுமதி கிடைத்தால், விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா வங்கதேச மண்ணில் விளையாடும் கடைசித் தொடராக இது அமைய வாய்ப்புள்ளது.

2026 செப்டம்பர் மாதம் இந்திய அணிக்கு மிகவும் பரபரப்பானதாக இருக்கப்போகிறது. வங்கதேசத் தொடர் மட்டுமின்றி, ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடரும் அதே மாதத்தில் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், செப்டம்பர் 19 முதல் ஜப்பானில் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் தொடங்கவுள்ளன. இத்தனை போட்டிகளுக்கு இடையே வங்கதேசத் தொடர் எப்படிச் சாத்தியமாகும் என்பதை பிசிசிஐ தான் முடிவு செய்ய வேண்டும். இருப்பினும், இந்திய அணியின் வருகைக்காகத் தங்களது அயர்லாந்து பயணத்தையே வங்கதேசம் தள்ளிவைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
