கொழும்பு : இந்தியா - வங்கதேசம் அணிகள் மோதிய ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றுப் போட்டி இலங்கையின் கொழும்பு நகரில் நடைபெற்றது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணி ஏற்கனவே ஆசிய கோப்பை தொடரின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுவிட்ட நிலையில், இந்தப் போட்டியில் ஐந்து வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது.

விராட் கோலி, ஹர்திக் பாண்டியா, பும்ரா, குல்தீப் யாதவ், முகமது சிராஜ் என ஐந்து முக்கிய வீரர்கள் வெளியே அமர வைக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஷமி, பிரசித் கிருஷ்ணா மற்றும் ஷர்துல் தாக்குர் அணியில் வாய்ப்பு பெற்றனர்.
வங்கதேச அணியின் துவக்க வீரர்களாக லிட்டன் தாஸ், டான்சித் ஹாசன் களமிறங்கினர். லிட்டன் தாஸ் ரன் ஏதும் எடுக்காத நிலையில், ஷமி வீசிய பந்தில் பவுல்டு அவுட் ஆனார். டான்சித் ஹாசன் 13 ரன்கள் எடுத்த நிலையில் தாக்குர் பந்தில் பவுல்டு அவுட் ஆனார்.
அடுத்து வந்த அனாமுல் ஹக் 4 ரன்களில் தாக்குர் பந்துவீச்சிலும், மெஹிதி ஹாசன் 13 ரன்களில் அக்சர் பந்திலும் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தனர். மறுபுறம் கேப்டன் ஷகிப் தல் ஹசன் தனி ஆளாக போராடி அதிரடியாக ரன் குவித்து வந்தார்.
அவருக்கு ஒத்துழைப்பு அளித்த ஆறாம் நிலை பேட்ஸ்மேன் டவுஹித் ஹிரிதோய் 54 ரன்கள் குவித்தார். ஷகிப் 80 ரன்கள் எடுத்து தாக்குர் பந்தில் பவுல்டு அவுட் ஆனார். ஹிரிதோய் ஷமி பந்திலும், ஷமீம் ஹுசைன் ஜடேஜா பந்திலும் ஆட்டமிழந்தனர்.
அடுத்து வந்த நஸும் அஹ்மத் போராடி 44 ரன்களை சேர்த்து அந்த அணி விக்கெட்களை இழந்த நிலையிலும் 250 ரன்களை கடக்க முக்கிய காரணமாக இருந்தார். மஹேதி ஹாசன் 29* மற்றும் டன்சின் ஹசன் சகிப் 14* ரன்கள் சேர்த்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
வங்கதேசம் 8 விக்கெட் இழப்பிற்கு 265 ரன்கள் குவித்தது. 193 ரன்களுக்கு 7 விக்கெட்களை இழந்த வங்கதேசம், 265 ரன்கள் வரை குவிக்க முக்கிய காரணம் கடைசி 10 ஓவர்களில் 77 ரன்களை வாரி இறைத்தது தான்.
இதைத் தவிர தான் வீசிய 10 ஓவர்களில் 65 ரன்களை அள்ளிக் கொடுத்த "வள்ளல்" ஷர்துல் தாக்குர் 3 விக்கெட்களை வீழ்த்தினாலும், இந்திய அணியை இக்கட்டான நிலைக்கு தள்ளி இருக்கிறார். கொழும்பு மைதானத்தில் 266 ரன்களை சேஸ் செய்வது என்பது கடினமான காரியம். அதிலும் இந்த பிட்ச் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமானது என்பதால் வங்கதேச கேப்டன் ஷகிப் ஹல் ஹசனை சமாளிக்க வேண்டும்.