இந்தியாவுடன் கண்டிப்பாக விளையாடுவோம்.. 6 போட்டிகளை செப்டம்பரில் நடத்த தீவிரம்.. வங்கதேசம் அறிவிப்பு
டாக்கா: பிசிசிஐ உடனான உறவில் ஏற்பட்ட கசப்பான சம்பவங்களுக்குப் பிறகும், வரும் செப்டம்பரில் இந்திய அணிக்கு எதிரான ஆறு போட்டிகள் கொண்ட வெள்ளை-பந்து தொடரை நடத்துவதில் வங்கதேச கிரிக்கெட் வாரியம் முழு நம்பிக்கை கொண்டுள்ளது.
முன்னதாக, வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்தாபிசுர் ரஹ்மான் ஐபிஎல் தொடரின் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிலிருந்து விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இரு நாட்டு கிரிக்கெட் வாரியங்களுக்கு இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது. மேலும், பாதுகாப்பு காரணங்களைக் சுட்டிக்காட்டி 2026 டி20 உலகக் கோப்பையில் தனது அணியின் ஆட்டங்களை இந்தியாவிற்கு வெளியே மாற்ற வேண்டும் என்று பிசிபி பிடிவாதமாக இருந்தது.

இதற்கு ஐசிசி ஒப்புக்கொள்ளாததால், இறுதியாக வங்கதேசத்திற்குப் பதிலாக ஸ்காட்லாந்து அணி மாற்று அணியாக உலகக் கோப்பைத் தொடரில் சேர்க்கப்பட்டது.தற்போது இரு நாட்டு கிரிக்கெட் வாரியங்களுக்கு இடையேயான உறவு சீராகி வரும் நிலையில், கடந்த ஆண்டு தள்ளிவைக்கப்பட்ட இத்தொடர் இந்த ஆண்டு செப்டம்பரில் வெற்றிகரமாக நடைபெறும் என்று வங்கதேச கிரிக்கெட் வாரியம் நம்பிக்கை தெரிவித்தது.
இதுகுறித்து பேசிய பிசிபி ஊடகக் குழுத் தலைவர் ஆசிப் ரப்பானி, "திட்டமிட்டபடி இந்தியத் தொடரை நடத்துவோம் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. இந்தியாவுக்கு எதிரான தொடர் உள்ளிட்ட அடுத்தடுத்த இருதரப்பு தொடர்களுக்கான ஊடக ஒளிபரப்பு உரிமைகளுக்கான (Media Rights) டெண்டரை (EOI) நாங்கள் வெளியிட்டுள்ளோம். இதற்கான ஏலத்தில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். இந்தியாவிற்கு எதிரான தொடர் மூலம் கிடைக்கும் நன்மைகள் குறித்து அனைவரும் அறிவர், எனவே இதற்கான அறிகுறிகள் சாதகமாகவே உள்ளன" என்று தெரிவித்தார்.
முன்னதாக பிசிபி வெளியிட்டிருந்த அட்டவணையின்படி, இந்திய அணி ஆகஸ்ட் 28 அன்று வங்கதேசம் சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் (ODI) தொடர் செப்டம்பர் 1, 3 மற்றும் 6 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.
அதேபோல், மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் செப்டம்பர் 9, 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.இத்தொடர் முதலில் கடந்த 2025 ஆகஸ்ட்-செப்டம்பர் மாதங்களில் நடைபெறவிருந்தது. ஆனால் இரு வாரியங்களின் ஒப்புதலின் பேரில் இத்தொடர் செப்டம்பர் 2026க்கு ஒத்திவைக்கப்பட்டது. சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் மற்றும் இரு அணிகளின் கால அட்டவணையைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக இரு வாரியங்களின் கூட்டாக அறிக்கையில் தெரிவித்தது.


Click it and Unblock the Notifications

