அடாத மழையிலும் விடாது அதிரடி காண்பித்த வங்கதேசம்! இந்தியாவுக்கு 308 ரன் இலக்கு!
டாக்கா: இந்தியா, வங்கதேசம் இடையேயான முதல் ஒருநாள் போட்டி டாக்காவில் இன்று நடைபெறுகிறது. டாசில் வென்ற வங்கதேசம் பேட்டிங் தேர்ந்தெடுத்து அதிரடியாக ஆடி 307 ரன்கள் குவித்துள்ளது.
டோணி தலைமையிலான இந்திய அணி, வங்கதேசத்துக்கு எதிராக 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. இன்று முதல் ஒருநாள் போட்டி தொடங்கியது. அனைத்து போட்டிகளும் இந்திய நேரப்படி பகல் 2.30 மணிக்கு ஆரம்பித்து பகல்-இரவு போட்டிகளாக நடைபெறும். டாசில் வென்ற வங்கதேச கேப்டன் மோர்டசா முதலில் பேட்டிங் தேர்ந்தெடுத்தார்.

அந்த அணி அதிரடியாக பேட்டிங் செய்து, 15.4 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 119 ரன்கள் எடுத்திருந்தநிலையில் மழை பலமாக பெய்ய தொடங்கியது. எனவே ஆட்டம் தடைபட்டது. தமிம் 57 ரன்களுடனும், லிட்டன் 3 ரன்களுடனும் களத்தில் நின்றனர். சர்க்கார் 54 ரன்களில் அவுட் ஆகியிருந்தார். சுமார் 15 நிமிட இடைவேளைக்கு பிறகு மீண்டும் ஆட்டம் தொடங்கியது.
ஆனால், இம்முறை அஸ்வின் அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தியாவுக்கு வலு சேர்த்தார். லிட்டன் 8 ரன்களிலும், முஷ்பிகுர் ரஹிம் 14 ரன்களிலும் அவரது பந்தில் அவுட் ஆகினர். தமிம் இக்பாலும் 60 ரன்களில் அஸ்விந் பந்து வீச்சில் அவுட் ஆனார்.
எனவே 102 ரன்னில் முதல் விக்கெட்டை இழந்த வங்கதேசம் 146 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இந்த திடீர் சரிவை ஷகிப் அல் ஹசனும், சபிர் ரகுமானும் தடுத்து நிறுத்தினர். இருவரும் பொறுப்பாகவும், அதிரடியாகவும் ஆடி ஸ்கோரை உயர்த்தினர்.
35 ஓவர்களில், வங்கதேசம் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு, 213 ரன்கள் எடுத்திருந்தது. அதன்பிறகு பேட்டிங் பவர் பிளே தேர்ந்தெடுத்த வங்கதேசம் அதிரடி மழையை தொடர்ந்தது. 49.4 ஓவர்களில் அந்த அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 307 ரன்கள் குவித்தது.
இந்திய தரப்பில் அஸ்வின் 3, உமேஷ் யாதவ் மற்றும் புவனேஸ்வர் குமார் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.


Click it and Unblock the Notifications