மிர்புர்: ஆசிய கோப்பை டி20 தொடரில் இன்று நடைபெற உள்ள பைனலில் இந்தியா - வங்கதேசம் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த தொடரில் தொடர் வெற்றிகளை குவித்து வரும் இந்திய அணி வங்கதேசத்தை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி ஆறாவது முறையாக சாம்பியன் பட்டைத்தை வெல்லும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.
வங்கதேசத்தில் நடந்து வந்த ஆசிய கோப்பை இருபது ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய 5 நாடுகள் பங்கேற்றன. ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதின.

லீக் சுற்றில் வங்கதேசம், பாகிஸ்தான், இலங்கை, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளை வீழ்த்திய இந்தியா 8 புள்ளிகளுடன் முதலிடத்தையும், வங்காளதேசம் 3 வெற்றி, ஒரு தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தையும் பிடித்து இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன.
இந்தியா-வங்கதேச அணிகள் இறுதிப் போட்டி இன்று நடக்கிறது. டோணி தலைமையிலான இந்திய அணி இந்தப் போட்டித் தொடரில் பேட்டிங், பந்து வீச்சில் சிறப்பாக விளையாடி வருகிறது. அதே நேரத்தில் இலங்கை, பாகிஸ்தான், எமிரேட்ஸ் அணிகளை வீழ்த்திய வங்கதேசம் உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுடன் களம் இறங்குகிறது.
இந்தியாவுடன் ஒப்பிடுகையில் வங்கதேச அணி பலம் குறைந்த அணி தான். ஏனேனில் ஆசிய கோப்பை போட்டிகளை 4 முறை நடத்தியும் ஒரு முறைகூட வங்கதேசத்தால் கோப்பையை வெல்ல முடியவில்லை. ஆசிய கோப்பை ஒருநாள் போட்டியில் 5 முறை சாம்பியன் பட்டம் பெற்று இருந்த இந்தியா முதல் முறையாக நடைபெறும் 20 ஓவர் ஆட்டத்திலும் கோப்பையை வெல்லும் ஆர்வத்தில் உள்ளது.
பேட்டிங்கை பொறுத்தவரை விராட் கோஹ்லி சிறப்பாக விளையாடி வருகிறார். ரோகித் சர்மா, தவான், ரெய்னா போன்ற அதிரடி பேட்ஸ்மேன்களும் நல்ல நிலையில் உள்ளார். மேலும் யுவராஜ்சிங் நல்ல நிலைக்கு திரும்பி இருப்பது கூடுதல் பலமாகும்.
வங்கதேச அணியின் பேட்டிங்கில் சபீர் ரகுமான் சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இலங்கைக்கு எதிராக சிறப்பாக விளையாடிய அவர், 80 ரன் எடுத்தார். இதுதவிர முஸ்பிகுர் ரகீம், சகீப்-அல்-ஹசன், மகமதுல்லா, கேப்டன் மொர்தாஸா போன்ற சிறந்த வீரர்களும் அந்த அணியில் உள்ளனர்.
இன்றைய இறுதிப்போட்டி இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ், தூர்தர்சனில் இந்தப் போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.