டாக்கா: இந்தியா மற்றும் பிசிசிஐக்கு எதிராக வங்கதேச அரசு சில நகர்வுகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில் "பொதுமக்களின் உணர்ச்சிகளுக்கு ஆட்பட்டு அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்காதீர்கள். இன்று நாம் எடுக்கும் முடிவு, அடுத்த 10 ஆண்டுகளுக்கு வங்கதேச கிரிக்கெட்டைப் பாதிக்கும்" என்று வங்கதேச அணியின் முன்னாள் கேப்டன் தமிம் இக்பால், அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்திற்கு (BCB) பகிரங்கமாக அறிவுரை வழங்கியுள்ளார்.
'கிரிக்பஸ்' (Cricbuzz) தளத்திற்குப் பேட்டியளித்துள்ள தமிம் இக்பால், இந்தியாவுடனான மோதல் போக்கை வங்கதேச வாரியம் கையாளும் விதம் குறித்து கவலை தெரிவித்துள்ளார்: "உலக கிரிக்கெட்டில் வங்கதேசம் எங்கே இருக்கிறது என்பதை யோசித்து முடிவெடுங்கள். இன்று எடுக்கும் ஒரு தவறான முடிவு, அடுத்த 10 வருட காலத்திற்கு நம் கிரிக்கெட்டைப் பின்னுக்குத் தள்ளிவிடும்."

சூழல் சிக்கலாக இருந்தாலும், ஐசிசி மற்றும் இந்திய அதிகாரிகளுடன் நேரடியாகப் பேசித் தீர்வு காண்பதே சிறந்தது என அவர் கூறி இருக்கிறார். "அரசாங்கத்தின் கருத்து முக்கியம் என்றாலும், பிசிபி ஒரு சுதந்திரமான அமைப்பு. அது சுயமாக முடிவு எடுக்க வேண்டும். மக்கள் உணர்ச்சிவசப்பட்டுப் பேசுவதற்கெல்லாம் வாரியம் செவிசாய்க்கக் கூடாது" என்று தமிம் கூறி இருக்கிறார்.
வங்கதேசத்தில் நடக்கும் ஹிந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களைச் சுட்டிக்காட்டி சில அமைப்புகள் இந்தியாவில் எதிர்ப்பு தெரிவித்தன. வங்கதேச நாட்டில் இருந்து முஸ்தபிசுர் ரஹ்மான் மட்டுமே ஐபிஎல் தொடரில் விளையாட இருந்த நிலையில் அவருக்கும் எதிர்ப்பு கிளம்பியது. இதை அடுத்து ஐபிஎல்-லிலிருந்து முஸ்தபிசுர் ரஹ்மானை விடுவிக்க பிசிசிஐ உத்தரவிட்டது.
இதற்குப் பதிலடியாக வங்கதேசம் ஐபிஎல் ஒளிபரப்பைத் தடை செய்தது. தற்போது டி20 உலகக் கோப்பைக்காக இந்தியா வர மறுக்கும் வங்கதேசம், தனது போட்டிகளை இலங்கைக்கு மாற்றக் கோரி ஐசிசி-க்கு இரண்டாவது முறையாகக் கடிதம் அனுப்பியுள்ளது.
தமிம் இக்பால் போன்ற அனுபவ வீரர்கள் சுட்டிக்காட்டியுள்ளபடி, இந்தியா போன்ற கிரிக்கெட் வல்லரசுடன் மோதுவது வங்கதேச கிரிக்கெட்டின் எதிர்காலத்தை என்னவாக மாற்றும் என்பது இப்போது பெரிய கேள்வியாக எழுந்துள்ளது.