பதுல்லா: வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் டாசில் வென்று முதலில் பேட் செய்துவரும் இந்தியா, 3ம் நாளான இன்று 6 விக்கெட்டுகளை இழந்தது. அவ்வப்போது பெய்து வரும் மழையால் ஆட்டத்தில் பாதிப்பு ஏற்பட்டு வந்த நிலையில், டீ இடைவேளைக்கு பிறகு ஆட்டத்தை தொடர முடியவில்லை. எனவே 3வது நாள் ஆட்டம் முன்கூட்டியே முடிந்தது.
வங்கதேசத்தில் சுற்றுப் பயணம் செய்துள்ள இந்திய கிரிக்கெட் அணி ஒரு டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகளில் ஆடுகிறது. டெஸ்ட் போட்டி பதுல்லா நகரில் நேற்று முன்தினம் தொடங்கியது.

டாசில் வென்ற இந்திய அணி கேப்டன் கோஹ்லி, பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார். இதையடுத்து முரளி விஜயும், ஷிகர் தவானும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். முதல் 5 ஓவர்களில் தடுத்தாடிய இந்திய வீரர்கள், அதன்பிறகு அடித்தாட தொடங்கினர். குறிப்பாக ஷிகர் தவான் ஆட்டத்தில் அதிரடியுடன், நேர்த்தியும் இருந்தது. ஒருமுனையில் தவான் அடித்தாடிய நிலையில், விஜய் மிகவும் பொறுமை காட்டி விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டார்.
மழை காரணமாக 4 மணி நேரங்கள் ஆட்டம் பாதிக்கப்பட்டதால் நேற்று மொத்தம் 56 ஓவர்கள்தான் வீசப்பட்டன. இந்திய அணி விக்கெட் இழப்பின்றி, 239 ரன்கள் எடுத்திருந்தபோது முதல் நாள் ஆட்ட நேரம் முடிவுக்கு வந்தது. ஷிகர் தவான் 150 ரன்கள், முரளி விஜய் 89 ரன்கள் எடுத்து களத்தில் நின்றனர்.
நேற்று காலை மீண்டும் பதுல்லாவில் மழை பெய்ததால், 2வது நாள் ஆட்டம் ஒரு பந்து கூட வீசப்படாமல் தடைபட்டது. மழை ஓய்ந்ததும் ஆட்டம் மீண்டும் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மழை விடாமல் பெய்ததால், 2வது நாள் ஆட்டம் முற்றிலுமாக கைவிடப்படுவதாக, இந்திய நேரப்படி மதியம் 1.30 மணியளவில் அம்பயர்கள் அறிவித்தனர்.
இதையடுத்து, 3வது நாள் ஆட்டம் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் இன்று தொடங்கியது. இந்திய தொடக்க வீரர்கள் இருவருமே தங்கள் ஆதிக்கத்தை தொடர்ந்தனர். முதல் நாள் ஆட்டத்தில் 89 ரன்களுடன் களத்தில் நின்ற விஜய், இன்று சதம் கடந்தார். அதேநேரம், முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 150 ரன்கள் எடுத்திருந்த தவான், மேற்கொண்டு 23 ரன்கள் சேர்த்திருந்த நிலையில், 173 ரன்களில் ஷகிப் அல் ஹசன் பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
இதைத் தொடர்ந்து களமிறங்கிய இரட்டை சத நாயகன், ரோகித் ஷர்மாவோ, 9 பந்துகளில் 6 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ஷகிப் அல் ஹசன் பந்தில் கிளீன் பௌல்ட் ஆனார். இதைத் தொடர்ந்து 14 ரன்கள் எடுத்திருந்த கோஹ்லியும், ஜுபைர் ஹொசைன் பந்தில் பௌல்ட் ஆகி வெளியேற இந்தியா 310 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
முதல் நாளில் விக்கெட்டை பறிகொடுக்காமல் ஆதிக்கம் செலுத்திய இந்தியா, 3வது நாளில் அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை இழந்தது. இருப்பனும் விஜயுடன், அஜிங்ய ரஹானே ஜோடி சேர்ந்து அணியை தூக்கி நிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர்.
விஜய் தொடர்ச்சியாக சிறப்பாக ஆடி 150 ரன்கள் சேர்த்திருந்தபோது, ஷகிப் அல் ஹசன் பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். அதிரடியாக ஆடிய ரஹானே 103 பந்துகளில் 98 ரன்கள் எடுத்திருந்தபோது ஹசன் பந்தில் பௌல்ட் ஆகி, சதம் அடிக்கும் வாய்ப்பை நழுவ விட்டார்.
இதன்பிறகு களமிறங்கிய விருத்திமான் சாகா 6 ரன்களில் ஹொசைன் பந்தில் பௌல்ட் ஆனார். இந்நிலையில், 462 ரன்களுக்கு இந்தியா 6 விக்கெட்டுகளை இழந்திருந்த நிலையில் மழையால் ஆட்டம் தடை பட்டது. இதன்பிறகு மாலை வரை மழை தொடர்ந்ததால், 3வது நாள் ஆட்டம் முடித்துக்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
அஸ்வின் 2 ரன்கள், ஹர்பஜன் சிங் 7 ரன்களுடன் களத்திலுள்ளனர். முன்னதாக, உணவு இடைவேளையின்போது மழை பெய்ததால் சற்று தாமதமாகவே ஆட்டம் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணி விவரம்: விராட் கோஹ்லி, முரளி விஜய், ஷிகர் தவான், அஜிங்ய ரஹானே, ரோகித் ஷர்மா, விருதிமான் சாஹா (விக்கெட் கீப்பர்), அஸ்வின், ஹர்பஜன் சிங், உமேஷ் யாதவ், வருண் ஆரோன், இஷாந்த் ஷர்மா.
வங்கதேச அணி விவரம்: முஷ்பிகுர் ரகிம் (கேப்டன்), தமிம் இக்பால், இம்ருல் கயேஸ், மொமினுல் ஹாக், ஷாகிப் அல் ஹசன், சவும்யா சர்கார், லிட்டோன் தாஸ் (விக்கெட் கீப்பர்), சுவகடா சோம், தைஜுல் இஸ்லாம், முகமது ஷாகித், ஜுபைர் ஹொசைன்.