நியூயார்க் : 2024 டி20 உலகக் கோப்பை தொடரின் பயிற்சிப் போட்டியில் வங்கதேச அணிக்கு எதிராக ஆடிய இந்திய அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த முறை உலகக்கோப்பை தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெற உள்ளது. அதிலும், இந்தியா ஆடும் குரூப் சுற்று போட்டிகள் அனைத்தும் அமெரிக்காவில் நடைபெற உள்ளது. இந்த நிலையில், வங்கதேச அணிக்கு எதிரான இந்த பயிற்சிப் போட்டியில் அமெரிக்க சூழ்நிலையை புரிந்து கொள்ள இந்திய அணி திட்டமிட்டது.

நியூயார்க் மைதானத்தில் இந்திய அணி மூன்று குரூப் சுற்றுப் போட்டிகளை ஆட உள்ளதால், அதே மைதானத்தில் நடைபெற்ற வங்கதேச அணிக்கு எதிரான பயிற்சிப் போட்டியில் அனைத்து வீரர்களுக்கும் விளையாட வாய்ப்பு அளித்தார் கேப்டன் ரோஹித் சர்மா.
இந்தப் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் குவித்தது. ரிஷப் பண்ட் 32 பந்துகளில் 53 ரன்களும், ஹர்திக் பாண்டியா 23 பந்துகளில் 40 ரன்களும் குவித்தனர். அடுத்து ஆடிய வங்கதேசம் 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 122 மட்டுமே எடுத்தது. இந்திய அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அர்ஷ்தீப் சிங் 3 ஓவர்கள் பந்து வீசி 12 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்கள் வீழ்த்தி இருந்தார்.
இந்த வெற்றிக்கு பின் பேசிய கேப்டன் ரோஹித் சர்மா, "நாங்கள் இந்தப் போட்டியில் என்ன நடக்க வேண்டும் என்று எதிர்பார்த்தோமோ அது நடந்தது. அந்த வகையில் நான் மகிழ்ச்சியுடன் இருக்கிறேன். இந்த சூழ்நிலைகளை சரியாக பழக வேண்டும் என்று நினைத்தோம். இது புதிய இடம், புதிய மைதானம், பிட்ச்சும் கூட புதியது. அந்த வகையில் நாங்கள் நினைத்தது நடந்தது." என்றார்.
மேலும், "ரிஷப் பண்ட்டுக்கு மூன்றாம் வரிசையில் பேட்டிங் செய்ய வாய்ப்பு கொடுத்ததற்கு காரணம் அவருக்கு நீண்ட நேரம் பேட்டிங் செய்ய வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று நினைத்ததுதான். நாங்கள் இன்னும் பேட்டிங் வரிசையை முடிவு செய்யவில்லை. அதனால் இந்த போட்டியில் அனைத்து வீரர்களும் பேட்டிங் செய்ய வேண்டும் என்று விரும்பினோம். அர்ஷ்தீப் சிங் தனது திறமையை முன்னும், பின்னும் மிக சிறப்பாக வெளிப்படுத்தினார். அவரிடம் நல்ல திறமை உள்ளது. இப்போது எங்களிடம் 15 வீரர்கள் இருக்கிறார்கள். இங்கு உள்ள சூழ்நிலைக்கு ஏற்ப நாங்கள் 11 பேர் கொண்ட அணியை தேர்வு செய்வோம்" என்றார் ரோஹித் சர்மா.