சென்னை: இந்திய டெஸ்ட் அணியின் மூத்த வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் போன்றே பந்து வீசும் 21 வயது ஆஃப் ஸ்பின்னர் ஒருவரை பிசிசிஐ அடையாளம் கண்டுள்ளது. மேலும், மூத்த இந்திய வீரர்களுடன் அவரை பயிற்சி முகாமில் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளது.
வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி வரும் செப்டம்பர் 19 அன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் துவங்க உள்ளது. அதற்கு முன்னதாக செப்டம்பர் 13 முதல் 18 வரை சென்னையில் இந்திய டெஸ்ட் அணியின் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. ஹிமான்ஷு சிங் என்ற இளம் ஆஃப் ஸ்பின்னரை அந்த பயிற்சி முகாமில் பங்கேற்க வருமாறு பிசிசிஐ அழைப்பு விடுத்துள்ளது.

அவர் மும்பையை சேர்ந்த ஆஃப் ஸ்பின்னர் ஆவார். இன்னும் மும்பை சீனியர் அணியில் கூட இடம் பெறாத அவரை டெஸ்ட் தொடரின் பயிற்சி முகாமுக்கு அழைத்து இருப்பது பலரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. இவர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு மாற்றாக பார்க்கப்படுகிறாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இந்திய அணி அடுத்த ஐந்து மாதங்களில் பத்து டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. வங்கதேச அணிக்கு எதிராக இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும், நியூசிலாந்து அணிக்கு எதிராக மூன்று டெஸ்ட் போட்டிகளிலும், ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஐந்து டெஸ்ட் போட்டிகளிலும் விளையாட உள்ளது. இந்த டெஸ்ட் சீசனின் முடிவில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நடைபெற உள்ளது.
அதன் பின் இந்திய டெஸ்ட் அணியில் மிகப்பெரிய அளவில் மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மூத்த வீரர்கள் பலருக்கும் அதன் பின் வாய்ப்பு குறையும். அப்போது இந்திய அணியின் வலது கை ஆஃப் ஸ்பின்னரான ரவிச்சந்திரன் அஸ்வினுக்கும் மாற்று வீரரை தேர்வு செய்ய வேண்டிய நிலை ஏற்படும். அதற்கான முன்னோட்டமாகவே ஹிமான்ஷு சிங்கை சென்னை சேப்பாக்கம் டெஸ்ட் போட்டியின் பயிற்சி முகாமில் பங்கேற்க அழைத்துள்ளதாக கூறப்படுகிறது.
ஹிமான்ஷு சிங் 6 அடி 7 அங்குலம் உயரம் கொண்ட ஆஃப் ஸ்பின்னர் ஆவார். இவர் அஸ்வினை போன்றே பந்து வீசக் கூடியவர். கடந்த சில ஆண்டுகளாக மும்பை அண்டர் 19 மற்றும் அண்டர் 23 அணிகளில் சிறப்பான பந்துவீச்சை பதிவு செய்துள்ளார். அந்த வகையில் இவர் அஸ்வினுக்கு மாற்றாக இருப்பாரா? என்ற கண்ணோட்டத்தில் தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர், இந்திய அணியின் மூத்த வீரர்களுடன் பயிற்சி முகாமில் பங்கேற்க வைக்க முடிவு செய்துள்ளார்.
அதன் மூலம், ஹிமான்ஷு சிங்கிற்கு நல்ல அனுபவம் கிடைக்கும். அவர் சமீபத்தில் நடந்த ஆந்திரா அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணிக்காக மிகச் சிறப்பாக பந்து வீசி இருந்தது குறிப்பிடத்தக்கது. அந்தப் போட்டியில் 74 ரன்கள் விட்டுக் கொடுத்து 7 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்திய அணியின் தேர்வுக் குழு ஹிமான்ஷு சிங்கின் செயல்பாடுகளை கண்காணித்து வருவதாக சொல்லப்படுகிறது. அவரது உயரம் காரணமாக அவரால் அதிகமாக பந்தை ஸ்பின் செய்ய முடிவதும் அவரது தேர்வுக்கு முக்கிய காரணமாக உள்ளது. எனினும், இந்த பயிற்சி முகாம் ஒரு ஆரம்பம் மட்டுமே. அவர் இனி மும்பை மாநில அணியில் இணைந்து சிறப்பாக பந்து வீசினால் இந்திய அணியில் இடம் பெரும் வாய்ப்பு கிடைக்கக் கூடும்.