ஃப்ளோரிடா : 2024 டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியா மற்றும் கனடா அணிகள் மோத உள்ள போட்டி மழையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. ஆனால், போட்டி ஓவர்கள் குறைக்கப்பட்டு நடத்தப்பட்டால் அது இந்திய அணிக்கு பின்னடைவாக மாறவும் வாய்ப்பு உள்ளது.
ஃப்ளோரிடா மாகாணத்தில் உள்ள லாடர்ஹில் மைதானத்தில் இந்தியா மற்றும் கனடா அணிகள் மோத உள்ள போட்டி நடைபெற உள்ளது. அங்கு கடந்த மூன்று நாட்களாகவே மழை மற்றும் வெள்ள பாதிப்புகள் உள்ளன. நேற்று நடைபெற இருந்த பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான போட்டி மழை மற்றும் மழையால் பாதிக்கப்பட்ட ஆடுகளத்தின் காரணமாக கைவிடப்பட்டது.

தற்போது அதே மைதானத்தில் இந்தியா மற்றும் கனடா அணிகள் மோதும் போட்டியும் மழையால் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. தற்போதைய வானிலை அறிக்கையின்படி அமெரிக்க நேரப்படி காலை 10:30 மணிக்கு போட்டி நடைபெறும் போது மழை குறைவாகவே இருக்கும். ஆனால், போட்டி நேரத்துக்கு முன்பு சுமார் மூன்று மணி நேரம் மழை பெய்யும் என வானிலை அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
அந்த மைதானத்தில் ஆடுகளப் பகுதிகளில் மழை நீர் எளிதாக தேங்குகிறது. அங்கு வடிகால் வசதிகள் சரியாக இல்லாததால் அந்த மழை நீரை வெளியேற்றும் பணி கடினமாக உள்ளது. அதன் காரணமாகவே பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள் ஆடவிருந்த போட்டி கைவிடப்பட்டது. ஒருவேளை மழை குறைவாக இருந்து மழை நீர் மைதானத்தில் தேங்கவில்லை என்றால் போட்டி முழுமையாக நடைபெறும்.
அங்குள்ள பிட்ச்சில் இதுவரை நடந்த போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்யும் அணிகள் சராசரியாக 174 ரன்கள் அடித்து உள்ளன. ஆனால், தற்போது மழை பெய்து அந்த பிட்ச்சின் தன்மை மாறி இருக்கும் என்பதால் 150 ரன்கள் எடுப்பதே பெரிய ஸ்கோர் ஆக இருக்கும். அந்த பிட்ச் கடந்த மூன்று நாட்களாக மூடி வைக்கப்பட்டு இருப்பதால் சுழற் பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும் என கூறப்படுகிறது. சில மணி நேரம் வெயில் பட்டால் மட்டுமே அந்த பிட்ச் பேட்டிங்கிற்கு சாதகமாக மாறும் வாய்ப்பு உள்ளது.
எனவே, இந்த போட்டி ஓவர்கள் குறைக்கப்பட்டு நடத்தப்பட்டால் அது இந்தியா மற்றும் கனடா என எந்த அணிக்கு வேண்டுமானாலும் சாதகமாக இருக்கலாம். கனடா அணி ஏற்கனவே தனது குரூப் சுற்றுப் போட்டிகளில் கடினமான நியூயார்க் பிட்ச்சிலேயே அதிக ரன்கள் குவித்து இருந்தது. எனவே, அந்த அணியிடம் இந்தியா கவனமாக இருக்க வேண்டும்.