இன்று 2வது ஒரு நாள் போட்டி.. தொடரை வெல்லுமா இந்தியா?
லண்டன்: இந்தியா - இங்கிலாந்து இடையிலான 2வது ஒரு நாள் போட்டி இன்று நடைபெறுகிறது. மொத்தம் 3 போட்டிகளில் முதல் போட்டியில் இந்தியா வென்றுள்ளதால், இதில் வெற்றி பெற்றால் தொடரை வெல்ல முடியும்.
இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. முதலில் நடந்த டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றது. ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. ரோஹித் சர்மா சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். குல்தீப் யாதவ் 6 விக்கெட்களை வீழ்த்தி இங்கிலாந்து அணியை சாய்த்தார்.
இரு அணிகளுக்கிடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை லண்டனில் நடைபெறவிருக்கிறது. கிரிக்கெட்டின் மெக்கா என்றழைக்கப்படும் லார்ட்ஸில் நடைபெறும் போட்டி மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.

சிறந்த வீரர்கள்
இந்திய அணியை பொறுத்தவரை அனைத்து துறைகளிலும் சிறப்பான பங்களிப்பை அளித்து வெற்றி வாகை சூடி வருகிறது. இந்திய அணியின் டாப் 4 வீரர்கள் சிறப்பான பேட்டிங் வெளிப்படுத்தி அணியை வெற்றி பெற செய்கின்றனர். அடுத்தடுத்து இரண்டு சதங்கள் விளாசிய ரோஹித் சர்மா,ஆரம்பம் முதலே அதிரடியாய் அடிக்கும் தவான், ரன் மெஷின் விராட் கோஹ்லி மற்றும் ராகுல், ரெய்னா, தோனி, ஹர்டிக் பாண்டியா என ஒரு பெரிய பேட்டிங் பட்டாளமே எதிரணியை அச்சுறுத்த வைக்கிறது.

குல்தீப் சுழல்
பந்துவீச்சை பொறுத்தவரை தனி ஒருவனாக நின்று இங்கிலாந்தை வீழ்த்திய குல்தீப் யாதவ், சிக்கனத்தின் சிகரம் சாஹல் ஆகியோர் எதிரணிக்கு சிம்மசொப்பனமாக விளங்குகிறார்கள். குறிப்பாக குல்தீப் யாதவின் பந்து எந்த பக்கம் திரும்பும் என்பதை இங்கிலாந்து வீரர்களால் கணிக்கவே முடியவில்லை. உமேஷ் யாதவ் மற்றும் சித்தார்த் கவுல் அல்லது புவனேஸ்வர் குமார் வேகப்பந்துவீச்சை கவனித்து கொள்வர்.

சுழலுக்கு அஞ்சும் இங்கிலாந்து
இங்கிலாந்து அணியை பொறுத்தவரை, அந்த அணியின் ஒரே பலவீனம் இந்திய அணியின் சுழல் பந்துவீச்சு மட்டுமே. குறிப்பாக குல்தீப் யாதவ் பந்துவீச்சை அவர்கள் சமாளிக்க முடியாமல் திணறுவது நமது பலம். இங்கிலாந்து அணியின் நடுவரிசை மிகவும் பலவீனமாக உள்ளது. ஜோ ரூட் சிறப்பாக விளையாட வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.

பட்லர் கை கொடுத்தால் நல்லது
காயம் காரணமாக அலெக்ஸ் ஹேல்ஸ் இடம் பெறாதது அந்த அணியின் நடுவரிசை பேட்டிங்கை பலவீனமாக்கியுள்ளது. அந்த அணியின் ஒரே நம்பிக்கை ஜோஸ் பட்லர். அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் பட்சத்தில் அந்த அணி அதிக ரன்களை குவிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.
இந்திய அணி தொடரை வெல்லுமா என பொறுத்திருந்து பார்க்கலாம் !!


Click it and Unblock the Notifications