நாக்பூர்: இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் 36 பந்துகளில் 59 ரன்கள் குவித்தார். இந்தப் போட்டியில் அவர் 59 ரன்கள் அடித்ததன் மூலம் உலக அளவில் எந்த வீரரும் செய்யாத நான்காம் வரிசை பேட்டிங் சாதனை ஒன்றை செய்து இருக்கிறார். இந்த போட்டியில் இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து 248 ரன்கள் அடித்து இருந்தது.
அடுத்து இந்திய அணி ஆடிய போது முதல் இரண்டு விக்கெட்களை 19 ரன்களுக்கு இழந்தது. அப்போது நான்காம் வரிசையில் ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டிங் செய்ய வந்தார். சுப்மன் கில் நிதான ஆட்டம் ஆட, ஸ்ரேயாஸ் அதிரடி ஆட்டம் ஆடி 30 பந்துகளில் அரை சதம் அடித்தார். அப்போது ஒருநாள் போட்டிகளில் நான்காம் வரிசை பேட்ஸ்மேனாக 1000-த்துக்கும் அதிகமான ரன்களை கடந்து, 100க்கும் அதிகமான ஸ்ட்ரைக் ரேட்டை பெற்று இருந்தார் ஸ்ரேயாஸ்.

இதன் மூலம் உலக அளவில் ஒருநாள் போட்டிகளில் நான்காம் வரிசையில் 1000 ரன்களை கடந்து 50க்கும் அதிகமான பேட்டிங் சராசரி மற்றும் 100க்கும் அதிகமான ஸ்ட்ரைக் ரேட் வைத்து இருந்த ஒரே பேட்ஸ்மேன் என்ற சாதனையை செய்தார். தற்போது நான்காம் வரிசை பேட்ஸ்மேனாக ஸ்ரேயாஸ் ஐயர் 34 இன்னிங்ஸ்களில் 1456 ரன்கள், 52 பேட்டிங் சராசரி, 103.33 ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ளார்.
உலகிலேயே வேறு எந்த பேட்ஸ்மேனும் இந்த சாதனையை செய்யவில்லை. ஒரு நாள் போட்டிகளில் நான்காம் வரிசையில் பேட்டிங் செய்வது என்பது சவாலானது. சில சமயம் முதல் இரண்டு விக்கெட் விரைவாக வீழ்ந்தால் நான்காம் வரிசை வீரர் துவக்க வீரர் போல விளையாட வேண்டும்.
அதே சமயம் விக்கெட்டுகள் 20 அல்லது 30 ஓவர்களுக்கு பிறகு வீழ்ந்தால் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் போல சூழ்நிலைக்கு ஏற்ப விளையாட வேண்டும். கடைசி பத்து ஓவர்களில் பேட்டிங் செய்ய வந்தால் அதிரடியாக ரன் குவிக்க வேண்டும். இவ்வாறாக நான்காம் வரிசை பேட்ஸ்மேன் அனைத்து இடங்களிலும் பேட்டிங் செய்ய தயாராக இருக்க வேண்டும்.
அந்த வகையில் ஸ்ரேயாஸ் ஐயர் தனது பணியை மிகச் சிறப்பாக செய்து வருகிறார். அதன் காரணமாகவே அவர் இந்திய அணிக்காக நான்காம் வரிசையில் இந்த சாதனையை செய்து இருக்கிறார். அதே போல முதல் வரிசையில் இதே சாதனையை செய்த வீரர் தென்னாபிரிக்காவின் குயிண்டன் டி காக் ஆவார்.
இரண்டாம் வரிசையில் இதே சாதனையை செய்தது இந்தியாவின் ரோஹித் சர்மா மற்றும் சுப்மன் கில். நான்காம் வரிசையில் ஸ்ரேயாஸ் ஐயர் இந்த சாதனையை செய்து இருக்கிறார். ஐந்தாம் வரிசையில் ஏபி டி வில்லியர்ஸ் இந்த சாதனையை செய்து இருக்கிறார்.