நாக்பூர்: இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதிய முதல் ஒருநாள் போட்டியில் சதம் அடிக்கலாம் என ஆசை, ஆசையாக காத்திருந்த சுப்மன் கில், ஹர்திக் பாண்டியா அடித்த ஒரு சிக்சரால் பதறிப் போனார். அடுத்த ஓவரிலேயே அதிரடியாக ஆடி தனது சதத்தை அடித்து விட வேண்டும் என்ற பதற்றத்தில் இருந்த கில், பந்தை தூக்கி அடித்து கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிய முதல் ஒருநாள் போட்டியில் தான் இந்த மோசமான சம்பவம் அரங்கேறியது. இதை பார்த்து கேப்டன் ரோஹித் சர்மா கொதித்து போனார். என்ன நடந்தது என விரிவாக பார்க்கலாம்.

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 248 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய இந்திய அணி ஜெய்ஸ்வால் மற்றும் ரோஹித் சர்மாவை அடுத்தடுத்து இழந்தது. அவர்கள் இருவரும் ஆட்டம் இழந்த போது இந்திய அணி 19 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தது. அப்போது சுப்மன் கில் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் இணைந்து அணியை மீட்டனர்.
இருவரும் அரை சதம் அடித்தனர். ஸ்ரேயாஸ் ஐயர் 59 ரன்கள் எடுத்த ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த அக்சர் பட்டேலும் விரைவாக ரன் சேர்த்தார். அவர் 52 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்தார். சுப்மன் கில் நிதானமாக ஆடி வந்தார். அவர் 83 ரன்கள் எடுத்திருந்தபோது இந்திய அணி ஐந்தாவது விக்கெட் ஆக ராகுலை இழந்தது.
அப்போது இந்திய அணியின் வெற்றிக்கு 24 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தது. சுப்மன் கில் சதம் அடிக்க 17 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தது. எப்படியும் அடுத்து வரும் பேட்ஸ்மேன் தான் சதம் அடிக்க ஒத்துழைப்பார் என நினைத்தார் சுப்மன் கில். ஆனால், ஹர்திக் பாண்டியா 36 வது ஓவரின் கடைசி பந்தில் அதிரடியாக ஒரு சிக்ஸ் அடித்தார்.
அப்போது இந்திய அணியின் வெற்றிக்கு தேவை 18 ரன்கள் என்று ஆனது. சுப்மன் கில் 17 ரன்கள் எடுத்தால் மட்டுமே சதம் அடிக்க முடியும் என்பதால் பதற்றம் அடைந்தார். அதுவரை நிதான ஆட்டம் ஆடிய கில், 37வது ஓவரில் அதிரடி ஆட்டம் ஆட முடிவு செய்தார். அந்த ஓவரின் முதல் பந்தில் ஃபோர் அடித்தார்.
அதற்கு அடுத்த பந்தை சிக்சர் ஆக அடிக்க முயன்றார். ஆனால், பந்து மேலே சென்றது. ஜோஸ் பட்லர் அதை எளிதாக கேட்ச் பிடித்தார். இதை அடுத்து சுப்மன் கில் 87 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். இந்திய அணி ஆறாவது விக்கெட்டையும் இழந்தது.
கடைசி நேரத்தில் வெற்றிக்கான ரன்னை பற்றி யோசிக்காமல் சதத்தை பற்றி யோசித்ததால் தான் இழப்பு ஏற்பட்டது. அதனால் கேப்டன் ரோஹித் சர்மா அதிருப்தி அடைந்தார். போட்டி முடிந்தவுடன் இது பற்றியும் அவர் சுட்டிக் காட்டினார். கடைசி நேரத்தில் வந்த பேட்ஸ்மேன்கள் ஒருவரை, ஒருவர் முந்த நினைத்ததால் தான் விக்கெட் வீழ்ச்சி ஏற்பட்டது என்றார். இந்தப் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.