கொல்கத்தா: இந்திய டி20 அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக மாறி இருக்கிறார் தமிழக சுழற் பந்துவீச்சாளர் வருண் சக்கரவர்த்தி. இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் அவர் 4 ஓவர்களில் 23 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து 3 விக்கெட்களை வீழ்த்தினார்.
அவர் 2021 ஆம் ஆண்டில் இந்திய டி20 அணியில் அறிமுகம் ஆகி இருந்தார். பிறகு சுமார் 3 ஆண்டுகளாக இந்திய அணியில் வாய்ப்பின்றி இருந்தார். இடையே ஐபிஎல் தொடரில் அபாரமாக செயல்பட்டு அதிக விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளர்கள் பட்டியலில் முதல் ஐந்து இடங்களில் இடம் பிடித்து வந்தார்.

இதை அடுத்து மூன்று ஆண்டுகள் கழித்து 2024 ஆம் ஆண்டில் தான் மீண்டும் இந்திய டி20 அணியில் இடம் பிடித்தார். அப்போது முதல் எட்டு போட்டிகளில் விளையாடி இருக்கும் அவர் 20 விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார். இதில் ஏழு போட்டிகளில் அவர் குறைந்தது இரண்டு விக்கெட்களையாவது வீழ்த்தி இருக்கிறார்.
இதன் மூலம் இந்திய அணியின் தவிர்க்க முடியாத சுழற் பந்துவீச்சாளராக மாறி இருக்கிறார் வருண் சக்கரவர்த்தி. அவரை இந்திய ஒரு நாள் அணியிலும் பிசிசிஐ தேர்வு செய்யும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், அது நிறைவேறவில்லை. அதே சமயம் டி20 அணியில் அவரை இனி நீக்குவதற்கான வாய்ப்புகள் இல்லை.
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி அபாரமாக செயல்பட்டது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 132 ரன்கள் மட்டுமே எடுத்தது. வருண் சக்கரவர்த்தி மூன்று விக்கெட்களை வீழ்த்தினார். அர்ஷ்தீப் சிங், ஹர்திக் பாண்டியா மற்றும் அக்சர் பட்டேல் தலா இரண்டு விக்கெட்களை வீழ்த்தினர்.
இங்கிலாந்து அணி நிர்ணயித்த 133 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி 12.5 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டியது. துவக்க வீரர் அபிஷேக் சர்மா அதிரடியாக ஆடி 34 பந்துகளில் 79 ரன்கள் குவித்து இருந்தார்.