IND vs ENG: காப்பாற்றிய மழை.. ஸ்ரேயாஸ், அபிஷேக் அதிரடி அரைசதம் வீண்.. என்ன நடந்தது?
துர்ஹாம்: இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி, மழையினால் கைவிடப்பட்டது.செஸ்டர்-லீ-ஸ்டிரீட்டில் உள்ள ரிவர்சைடு மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 189 ரன்கள் குவித்தது.
ஆனால், இங்கிலாந்து அணி தனது இன்னிங்ஸைத் தொடங்குவதற்கு முன்பே மழை குறுக்கிட்டது. நீண்ட நேரம் காத்திருந்தும் மழை நிக்காததால், நடுவர்கள் ஆட்டத்தைக் கைவிடுவதாக அறிவித்தனர். இத்தொடரின் இரண்டாவது டி20 போட்டி சனிக்கிழமை ஜூலை 4 மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.


டி20 கிரிக்கெட்டில், குறிப்பாக இங்கிலாந்து போன்ற வலுவான பேட்டிங் வரிசையைக் கொண்ட அணிக்கு எந்த இலக்கும் எட்ட முடியாத ஒன்று அல்ல. இருப்பினும், இந்த மைதானத்தில் 190 ரன்கள் என்பது எளிதான காரியம் அல்ல, அதற்கு அவர்கள் பவர்ப்ளேயில் சிறப்பான தொடக்கத்தைப் பெற வேண்டும். இந்திய அணியில் மூன்று பிரதான ஸ்பின்னர்கள் இடம் பெற்றுள்ளனர், சுழலுக்கு சாதகமான சூழல் இருந்தால் அவர்கள் முக்கிய பங்கு வகித்திருப்பார்கள்.
மேகமூட்டமான வானிலை மற்றும் லேசான தூறல் காரணமாக இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச விரும்பியது, அதே போன்ற வாய்ப்பும் அவர்களுக்குக் கிடைத்தது. சாகிப் மஹ்மூத் ஆரம்பத்திலேயே விக்கெட் வீழ்த்தி அசத்தினார், மேலும் ஒரு ரன்-அவுட் மூலம் இங்கிலாந்து முன்னிலை பெற்றது. இருப்பினும், இங்கிலாந்து அணி வீரர்கள் சில பீல்டிங் தவறுகளைச் செய்ததால் ஆட்டம் அவர்கள் கையை விட்டு நழுவியது. ஸ்பின்னர்களால் பெரிய அளவில் நெருக்கடி கொடுக்க முடியவில்லை. சாகிப் மஹ்மூத் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார், ஆனால் ஒட்டுமொத்தமாக இங்கிலாந்தின் பீல்டிங் அவ்வளவு சிறப்பாக அமையவில்லை.
இந்திய அணி பேட்டிங்கில் சற்று தடுமாற்றத்துடன் தொடங்கினாலும், அபிஷேக் சர்மா பவர்ப்ளேயில் அதிரடியாக விளையாடி விரைவான அரைசதம் கடந்தார். அவர் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயருடன் இணைந்து 82 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார். ஸ்ரேயாஸ் ஐயர் 47 பந்துகளில் 68 ரன்கள் எடுத்தார். ஆட்டத்தின் இறுதியில், சிவம் துபே 21 பந்துகளில் 42 ரன்கள் குவித்து இந்திய அணியை இமாலய இலக்கை நோக்கி அழைத்துச் சென்றார். இதன் மூலம் இந்திய அணி 189 ரன்களை எட்டியது.
ஒருவேலை மழை நின்று ஆட்டம் தொடங்கி இருந்தால் ஓவர்கள் குறைக்கப்பட்டு இலக்கும் மாற்றி அமைக்கப்பட்டு இருக்கும். அதுமட்டும் இல்லாமல் மைதானம் ஈரமாக இருக்கும் என்பதால் இந்திய பவுலர்கள், குறிப்பாக ஸ்பின்னர்கள் தடுமாறி இருப்பார்கள். இதனால் இங்கிலாந்து அணி மாற்றி அமைக்கப்பட்டு இருக்கும் ஸ்கோரை எளிதாக எட்டி இருக்கலாம். ஆனால், மழை வந்து காப்பாற்றிவிட்டது என்றே சொல்ல வேண்டும்.


Click it and Unblock the Notifications

