ஹைதராபாத் : இங்கிலாந்து அணியை சேர்ந்த 20 வயது வீரர் சோயப் பஷீருக்கு இந்தியா விசா வழங்காததை அந்நாட்டு ஊடகங்கள் ஊதிப் பெரிதாக்கி உள்ளன. இதை அடுத்து இங்கிலாந்து மக்கள் பலரும் இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியை இங்கிலாந்து அணி புறக்கணிக்க வேண்டும் என குரலெழுப்பி வருகின்றனர்.
ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க இங்கிலாந்து அணி இந்தியா வந்துள்ளது. எப்போதும் சில வாரங்கள் முன்பே டெஸ்ட் தொடருக்கு வரும் இங்கிலாந்து அணி இந்த முறை மூன்று நாட்கள் முன்பு தான் இந்தியா வருவோம் என பிடிவாதமாக நின்று மூன்று நாட்கள் முன்பு இந்தியா வந்தது. இந்த நிலையில் அந்த அணியில் பாகிஸ்தான் வம்சாவளியை சேர்ந்த சோயப் பஷீர் என்ற இளம் வீரருக்கு இந்திய விசா கிடைக்கவில்லை.

பொதுவாக இந்தியாவில் பாகிஸ்தான் குடிமக்கள் மற்றும் அந்த வம்சாவளியை சேர்ந்த வெளிநாட்டினர் விசா வாங்க வேண்டும் என்றால் குறைந்தது ஒரு வார காலம் ஆகும். ஆனால், சோயப் பஷீர் விஷயத்தில் விண்ணப்பம் அளிப்பதில் ஏதோ தவறு நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இதை அடுத்து அவர் தற்போது விசா நடைமுறையை முடிக்க வேண்டும் என்பதால் இங்கிலாந்து நாட்டிலேயே தங்கி இருக்கிறார்.
இந்த விவகாரம் இங்கிலாந்து நாட்டில் பூதாகரமாக வெடித்துள்ளது. அங்குள்ள டெய்லி மெயில் உள்ளிட்ட ஊடகங்கள், "என்னதான் சோயப் பஷீர் பாகிஸ்தான் வம்சாவளியை சேர்ந்தவர் என்றாலும், அவர் இங்கிலாந்து நாட்டில் பிறந்து வளர்ந்த இங்கிலாந்து குடிமகன். அவருக்கு இந்தியா விசா வழங்காது என்றால் இங்கிலாந்து கிரிக்கெட் அணி முதல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்கவே கூடாது. டெஸ்ட் போட்டியை புறக்கணிக்க வேண்டும்." என கட்டுரை எழுதி உள்ளது.
அதே கருத்தை இங்கிலாந்து மக்கள் பலரும் சமூக ஊடகங்களில் பிரதிபலிக்கத் துவங்கி இருக்கின்றனர். அதே சமயம், சிலர் மற்ற நாட்டு விசா நடைமுறைகளை நாம் மதிக்க வேண்டும். இதே போல இங்கிலாந்து நாட்டு விசா நடைமுறையை வேறு ஒரு நாடு மாற்றிக் கொள்ள சொன்னால் நாம் செய்வோமா? என கேள்வி எழுப்பியும் வருகின்றனர்.
இதற்கிடையே இந்த விவகாரம் இங்கிலாந்து பிரதமர் அலுவலகத்துக்கு சென்றுள்ளது. தற்போது இங்கிலாந்து பிரதமராக இந்திய வம்சவாளியை சேர்ந்த ரிஷி சுனக் இருக்கும் நிலையில் அவர் அதற்கு நேரடியாக பதில் அளிக்கவில்லை. அவரது அலுவலக அதிகாரிகள் ஷோயப் பஷீருக்கு விரைவில் விசா கிடைக்கும் என நம்புவதாக மட்டும் கருத்து கூறி உள்ளனர். இங்கிலாந்தில் இது போன்ற விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், இங்கிலாந்து அணி முதல் டெஸ்ட்டில் ஆட தயாராகி வருகிறது. முதல் டெஸ்ட்டில் ஆட உள்ள 11 வீரர்கள் கொண்ட அணியை அறிவித்தும் உள்ளது.