லீட்ஸ்: இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. ஐந்தாவது நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 350 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம், அதேவேளையில் இந்திய அணி 10 விக்கெட்டுகளை கைப்பற்றினால் வெற்றியை உறுதி செய்ய முடியும். இந்தப் போட்டி டிராவாக முடிய வாய்ப்பிருந்தாலும், இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் டங் தங்கள் அணி மெதுவாக ஆடி டிராவை நோக்கிச் செல்லாது என உறுதியாகத் தெரிவித்துள்ளார்.
இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 471 ரன்கள் எடுத்தது. பதிலடியாக இங்கிலாந்து அணி 465 ரன்கள் குவித்தது. இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி 364 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

இதன்மூலம் இங்கிலாந்து அணிக்கு 371 ரன்கள் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. நான்காவது நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 21 ரன்கள் எடுத்திருந்தது. இதனால், ஐந்தாவது நாளில் 350 ரன்கள் எடுக்க வேண்டிய சவாலான இலக்கை எதிர்கொள்கிறது.
நான்காம் நாள் ஆட்டம் முடிந்த பிறகு பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த ஜோஷ் டங், "நாங்கள் வெற்றியை நோக்கித்தான் செல்வோம். ஓய்வறையில் இந்தச் செய்தி எங்களுக்கு மிகத் தெளிவாகச் சொல்லப்பட்டது. நாங்கள் மிகவும் நேர்மறையாக இருக்க விரும்புகிறோம். இந்திய அணி நாளை மிகச் சிறப்பாகப் பந்து வீசுவார்கள், ஆனால் அழுத்தத்தை எதிர்கொண்டு அதைத் திருப்பிக் கொடுப்பதில் எங்களின் வெற்றி உள்ளது. இதை ஏன் செய்ய முடியாது என்று நான் நினைக்கிறேன்," என்று கூறினார்.
இங்கிலாந்து அணி சமீப காலமாக 'பேஸ்பால்' (Bazball) எனப்படும் அதிரடி ஆட்ட முறையைப் பின்பற்றி வருகிறது. இது பேட்டிங்கில் மட்டுமல்லாமல், போட்டியில் எடுக்கப்படும் அனைத்து முடிவுகளையும் துணிச்சலுடன் மற்றும் வேகமாக எடுப்பதை மையமாகக் கொண்டது. எனவே, இங்கிலாந்து அணி மெதுவாக ஆடி போட்டியை டிரா செய்ய முயலாது என்பதை ஜோஷ் டங் உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்தப் போட்டியின் இறுதி நாள் ஆட்டம் பரபரப்பான முடிவைத் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணியின் பந்து வீச்சு, குறிப்பாக ஜஸ்பிரித் பும்ரா மற்றும் சிராஜ் ஆகியோரின் செயல்பாடு ஐந்தாவது நாள் அன்று முக்கியமானதாக இருக்கும். இங்கிலாந்து அணியின் அதிரடி பேட்டிங்கை எதிர்கொள்ள வேண்டிய சவாலை அவர்கள் எதிர்நோக்கி உள்ளனர். ஆண்டர்சன்- டெண்டுல்கர் ட்ராபியின் முதல் போட்டி முடிவு நிச்சயம் முக்கியம் வாய்ந்ததாக இருக்கும்.