
முதல் டெஸ்ட்
முதல் இன்னிங்ஸில் இந்திய அணியின் சிறப்பான பேட்டிங்கால், இங்கிலாந்தை விட 95 ரன்கள் முன்னிலை பெற்றது. இந்திய அணியில் ரோகித் சர்மா 36 ரன்கள் எடுத்து சிறப்பான தொடக்கம் கொடுத்து வெளியேறினார். பின்னர் வந்த புஜாரா 13 ரன்களுக்கும், விராட் கோலி டக் அவுட்டாகியும் வெளியேறினர். இந்திய அணியை மீட்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரஹானே 5 ரன்களுக்கு வெளியேறினார். இதனால் இந்திய அணி ரன் எடுக்க திணறி வந்தது.

ராகுலின் பொறுப்பு
பொறுப்புடன் ஆடிய கே.எல்.ராகுல் 84 ரன்களை சேர்த்தார். இதன் பின்னர் வந்த பண்ட் 25 ரன்களும், ஜடேஜா 56 ரன்களும் எடுக்க இந்திய அணி சற்று வலுவான நிலைக்கு திரும்பியது. எனினும் இந்திய அணியின் முதல் 8 விக்கெட் விழுந்த போது அணியின் ஸ்கோர் ஓரளவு உறுதிபடுத்தப்பட்டது. 232/8 ரன்கள் சேர்த்து விளையாடி வந்த சூழலில் வெளியே 2 விக்கெட்டுகள் மட்டுமே இருந்தது.

போட்டியில் ட்விஸ்ட்
இந்திய அணியின் டெயில் எண்டர்ஸ் மிகவும் மோசமாக விளையாடும் என பல்வேறு விமர்சனங்கள் இதற்கு முன்னர் எழுந்ததுண்டு. ஆனால் இந்த போட்டியில் அது மாறியது. இந்திய அணிக்கு மீதம் 2 விக்கெட்டுகள் இருந்த போது 250 ரன்களை கூட இந்தியா கடக்காது எனக் கருதப்பட்டது. அந்த நேரத்தில் ஜோடி சேர்ந்த ஷமி, பும்ரா இருவரும் அதிரடி காட்டினார். இதனால் ஷமி விரைவாக 13 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

சர்ப்ரைஸ் பார்ட்னர்ஷிப்
அடுத்து ஸ்கோர் 245/9 என இருந்தபோது, கடைசியாக பும்ராவும், சிராஜும் களத்தில் இருந்தனர். இந்தியாவின் இன்னிங்ஸ் விரைவில் முடிந்துவிடும் என இங்கிலாந்து பவுலர்கள் சாதரணமாக எண்ணிவிட்டனர். இவர்கள் 10 பந்துகளை கூட தாக்குப்பிடிக்க மாட்டார்கள் எனக் கருதப்பட்ட நிலையில் சாம் கரன் வீசிய ஒரு ஓவரின் முதல் 3 பந்துகளில், பும்ரா 14 ரன்கள் விளாசி அசத்தினார். இதனால், இந்திய அணியின் ஸ்கோர் 250 ரன்களை கடந்து மளமளவென உயர்ந்தது.

இங்கிலாந்து பவுலர்கள் திணறல்
ஒருபுறம் ஜஸ்பிரித் பும்ரா அதிரடி காட்டி வந்த நிலையில், அவருக்கு ஜோடியாக மறுமுனையில் முகமது சிராஜ் தடுப்பாட்டம் ஆடி பார்ட்னர்ஷிப் கொடுத்தார். இதனால், இந்திய அணி 90 ரன்களை கடந்து முன்னிலை பெற்றது. இங்கிலாந்தின் நட்சத்திர பவுலர் ஆண்டர்சன் பந்துவீச்சையே இவர்கள் இருவரும் அசால்ட்டாக சமாளித்தனர்.

சிராஜை சீண்டிய ஆண்டர்சன்
இந்நிலையில் ஆட்டத்தின் 84 ஓவரை கடைசி பந்தில் சிராஜிற்கு, ஆண்டர்சன் பந்துவீசினார். அவர் வீசிய கடைசி பந்தை சிராஜ் அடிக்க முற்பட்டு கீப்பரிடம் பந்து சென்றது. ஆனால், பந்து பேட்டில் படவில்லை. இதனைத் தொடர்ந்து கோபமடைந்த ஆண்டர்சன் சிராஜின் அருகில் சென்று கடுமையான சில வார்த்தைகளை கூறிவிட்டுச் சென்றுள்ளார். இது சிராஜுக்கு கோபத்தை ஏற்படுத்த அவர் உடனடியாக ஆண்டர்சனின் மேல் மோதி பதில் வார்த்தைகளை கொடுத்தார்.

ரசிகர்கள் கொந்தளிப்பு
அவர்கள் இருவருக்கு ஏற்பட்ட அந்த வாய் சண்டை குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றியவர்களின் பட்டியலில் நேற்று ஆண்டர்சன் 3வது இடத்திற்கு முன்னேறினார். அப்படிபட்ட தலைசிறந்த பவுலர் இந்தியாவின் டெய்ல் என்டர்ஸை வீழ்த்த முடியாமல் தவித்ததும், இந்திய வீரர்களை கோபப்படுத்தி அவர்களின் கவனத்தை திசைத்திருப்பியது கேவலமான செயல் என ரசிகர்கள் இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

முடிவு
ஜேம்ஸ் ஆண்டர்சன், சிராஜிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அடுத்த ஓவரிலேயே ஜஸ்பிரித் பும்ரா அவுட்டானார். இதனால் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 278 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்தை விட 95 ரன்கள் முன்னிலை பெற்றது. தற்போது இங்கிலாந்து அணி 2வது இன்னிங்ஸில் 30/0 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.


Click it and Unblock the Notifications











