ஹைதராபாத் : இந்திய டெஸ்ட் அணியின் மூன்றாம் வரிசை பேட்ஸ்மேன் சுப்மன் கில், டெஸ்ட் போட்டிகளில் மோசமாக ஆடி வரும் நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தன் விக்கெட்டை கட்டிக் காப்பாற்றி நிதான ஆட்டம் ஆடினார். ஆனாலும், ஒரு முறை எல்பிடபுள்யூ முறையில் அவுட் ஆகாமல் நூலிழையில் தப்பினார்.
இந்தப் போட்டியில் முதலில் இங்கிலாந்து அணி பேட்டிங் செய்து 246 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய இந்திய அணிக்கு ரோஹித் சர்மா - ஜெய்ஸ்வால் அதிரடி துவக்கம் அளித்தனர். ரோஹித் சர்மா 24 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து மூன்றாம் வரிசையில் பேட்டிங் செய்ய சுப்மன் கில் வந்தார்.

ரோஹித் சர்மா - ஜெய்ஸ்வால் ஜோடி அதுவரை அதிரடி ஆட்டம் ஆடி 10 ஓவர்கள் எல்லாம் 68 ரன்களை கடந்து இருந்த நிலையில், அடுத்து வந்த சுப்மன் கில் புஜாரா அளவுக்கு நிதான ஆட்டம் ஆடி சோதித்தார். அப்படி அவர் பேட்டிங் செய்த போது 14வது ஓவரில் இங்கிலாந்து அணியின் ஸ்பின்னர் ரெஹான் அஹ்மத் பந்து வீசினார். அந்த பந்தை தடுக்க வந்தார் சுப்மன் கில். ஆனால், பந்து அவரது காலில் பட்டது.
இங்கிலாந்து அணி அவுட் கேட்ட போது அம்பயர் அவுட் தரவில்லை. அதை அடுத்து இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ரிவ்யூ கேட்டார். நிச்சயம் அது அவுட் போலத் தான் அனைவருக்கும் தெரிந்தது. ஆனால், ரிவ்யூவில் பந்து லேசாக பவுன்ஸ் ஆகி ஸ்டம்ப்புக்கு மேலே செல்வது தெரிந்தது. அதனால் சுப்மன் கில் அவுட் இல்லை என தீர்ப்பு அளித்தார் அம்பயர்.
ஒருவேளை களத்தில் நின்ற அம்பயர் அவுட் கொடுத்து இருந்தால் சுப்மன் கில் ரிவ்யூ கேட்காமல் வெளியேறி இருக்கவும் வாய்ப்பு இருந்தது. அந்த அளவுக்கு அது எல்பிடபுள்யூ போலவே தெரிந்தது. ஆனால், டிஆர்எஸ் மற்றும் களத்தில் இருந்த அம்பயர் அவுட் தராததாலும் தப்பினார் சுப்மன் கில்.
முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 1 விக்கெட் இழப்பிற்கு 119 ரன்கள் எடுத்து இருந்தது. ஜெய்ஸ்வால் 70 பந்துகளில் 76 ரன்களும், சுப்மன் கில் 43 பந்துகளில் 14 ரன்களும் எடுத்து களத்தில் உள்ளனர். இங்கிலாந்து அணியை விட 127 ரன்கள் பின்தங்கி உள்ளது இந்திய அணி.