
இங்கிலாந்து பேட்டிங்
முதல் இன்னிங்ஸில் சற்று அசால்ட்டாக விளையாடிய இங்கிலாந்து அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து சரிவை சந்தித்தது. ஆனால் 2வது இன்னிங்ஸில் சுதாரித்துக்கொண்டு மிகப்பொருமையாக ரன்களை சேர்த்துள்ளது. நேற்று நடைபெற்ற 4வது நாள் போட்டியில் இங்கிலாந்து அணி தனது 2வது இன்னிங்ஸை தொடர்ந்து ஆடியது.

நிதான தொடக்கம்
தொடக்க வீரர்கள் ராரி பேர்ன்ஸ் 49 பந்துகளில் 18 ரன்களும், சிப்லே 133 பந்துகளை சந்தித்து வெறும் 28 ரன்களையுமே சேர்த்து வெளியேறினர். பின்னர் வந்த கிராவ்லே 6 ரன்களுக்கு அவுட்டாக இங்கிலாந்து அணி தடுமாறியது. அதன் பிறகு ஜோடி சேர்ந்த ஜோ ரூட், பேர்ஸ்டோ ஜோடி சீரான வேகத்தில் ரன்களை உயர்த்தினர். கேப்டன் ஜோ ரூட் 14 பவுண்டரிகளுடன் சதம் (109) அடித்து அசத்தினார்.பேர்ஸ்டோ 4 பவுண்டரிகளுடன் 30 ரன்கள் சேர்த்தார்.

வெற்றி இலக்கு
நீண்ட நேரமாக தலைவலி கொடுத்து வந்த இந்த பார்ட்னர்ஷிப்பை இளம் வீரர் முகமது சிராஜ் பிரித்தார். இதன் பிறகு விக்கெட்டுகள் மளமளவென விழ இங்கிலாந்து அணி 303 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்தியா ஏற்கனவே 95 ரன்கள் முன்னிலையில் இருந்ததால் 209 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வாக்குவாதம்
இந்நிலையில் ஆட்டத்தின் போது முகமது சிராஜ், சாம் கரணிடம் சண்டையிட்ட வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. இங்கிலாந்து அணியின் இளம் வீரர் சாம் கரண், லோயர் ஆர்டரில் நீண்ட நேரமாக தலைவலி கொடுத்து வந்தார். அப்போது ஆட்டத்தின் 74வது ஓவரை வீசிய முகமது சிராஜ், 4வது பந்தை ஷார்ட் வைடாக போட, அதனை சாம் கரண் பவுண்டரிக்கு விளாசினார். இதன் பின்னர் சாம் கரணுக்கு அருகில் வந்த சிராஜ், அவரை நோக்கி ஆக்ரோஷமான வார்த்தைகளை உதிர்த்தார். இதனையடுத்து இருவருக்குள்ளும் வாக்குவாதம் மோசமானது.

விராட் கோலியின் மாற்றம்
இதனால் ஆட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது சிராஜிடம் சென்ற கேப்டன் விராட் கோலி, மிகவும் பொறுமையாக சிராஜை சமாதானம் செய்து பிரச்னையை தீர்த்து வைத்தார். வழக்கமாக விராட் கோலி தான் போட்டிகளின் போது ஆக்ரோஷமான வார்த்தைகளை உதிர்த்திடுவார். ஆனால் இன்று மிகப்பொறுமையாக நடந்துக்கொண்டது ரசிகர்களுக்கு வியப்பளித்தது.

காரணம்
நேற்றைய ஆட்டத்தில் இந்திய அணி சார்பாக சிராஜ் பேட்டிங் செய்துகொண்டிருந்த போது இங்கிலாந்து பவுலர் ஜேம்ஸ் ஆண்டர்சன் சீண்டலில் ஈடுபட்டார். சிராஜ் நீண்ட நேரமாக சிறப்பாக பேட்டிங் செய்து வந்ததால், அவரை திசைத் திருப்புவதற்காக ஆண்டர்சன் அப்படி செய்தது ரசிகர்களுக்கு கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அதனை மனதில் வைத்தே சிராஜ் இன்று பதிலடி கொடுத்துள்ளார் எனக்கூறப்படுகிறது.

4வது நாள் ஆட்ட முடிவு
நேற்றைய நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 52 ரன்கள் எடுத்துள்ளது. தொடக்க வீரர் கே.எல்.ராகுல் 26 ரன்கள் எடுத்து வெளியேறினார். ரோகித் சர்மா 12 ரன்களுடனும், சட்டீஸ்வர் புஜாரா 12 ரன்களும் எடுத்து களத்தில் உள்ளனர். வெற்றி பெற இன்னும் 157 ரன்கள் தேவை.


Click it and Unblock the Notifications











