
முதல் இன்னிங்ஸ் ஆட்டம்
இதனையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி 278 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தொடக்க வீரர் ரோகித் சர்மா 36 ரன்களுக்கு சாம் கரணிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதன் பின்னர் வந்த சட்டீஸ்வர் புஜாரா 4 ரன்களுக்கு வெளியேறி மீண்டும் ஏமாற்றமளித்தார். கேப்டன் விராட் கோலியை வந்தவேகத்தில் டக் அவுட்டாக்கி ஆண்டர்சன் வெளியேற்றினார். துணைக்கேப்டன் ரஹானேவோ 5 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினார். இதனால் தத்தளித்து வந்த இந்திய அணியை கே.எல்.ராகுல் தூக்கி நிறுத்தினார். சிறப்பாக விளையாடிய அவர் 84 ரன்களை சேர்த்தார். இதன் பின்னர் வந்த பண்ட் 25 ரன்களும், ஜடேஜா 56 ரன்களும் எடுக்க இந்திய அணி சற்று வலுவான நிலைக்கு திரும்பியது.

சர்ப்ரைஸ்
இறுதிக்கட்டத்தில் இந்திய அணிக்கு பெரும் சர்ப்ரைஸாக, கடைசி விக்கெட்டுக்கு சிராஜ் - பும்ரா கூட்டணி 33 ரன்கள் எடுத்தது. பும்ரா 28 ரன்களும், சிராஜ் 7 ரன்களும் எடுத்தனர். இந்த கடைசி விக்கெட் பார்ட்னர்ஷிப்பால், இந்திய அணிக்கு எதிர்பார்த்ததைவிட அதிக லீட் கிடைத்தது. முடிவில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 278 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் இந்தியாவுக்கு 95 ரன்கள் லீட் கிடைத்துள்ளது.

நிதான ஆட்டம்
இதன் பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணி மிகப்பொறுமையாக விளையாடி வருகிறது. தற்போது வரை 11.1 ஓவர்களுக்கு அந்த அணி 25 ரன்களை எடுத்துள்ளது. இந்திய அணியின் ஸ்கோரை முந்துவதற்கே இன்னும் 70 ரன்கள் தேவை. ஆட்டத்தின் 3 நாட்கள் முடிந்துள்ள நிலையில் இன்று 4வது நாள் ஆட்டம் தொடங்குகிறது. கம்பேக் கொடுக்கும் எண்ணத்தோடு பொறுமை காக்கும் இங்கிலாந்து, அதிவேகமாக விக்கெட்களை சுருட்ட இந்திய அணி முயற்சி என முதல் டெஸ்ட் போட்டி, யாருக்கு சாதகமாக செல்லும் என கணிக்க முடியாதவாறு பரபரப்பு கட்டத்தில் உள்ளது.

மழை குறுக்கீடு
ஆனால் மழையின் பாதிப்பு அந்த பரபரப்புகளை ஏமாற்றங்களாக மாற்றி வருகிறது. டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியை போன்றே இந்த போட்டியிலும் மழை அடிக்கடி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. 2ம் நாள் ஆட்டத்தில் கிட்டத்தட்ட பாதி நாளே மழையினால் கைவிடப்பட்டது. அதே போல் நேற்றைய போட்டியிலும் வெளிச்சமின்மை காரணமாக முன்கூட்டியே ஆட்டம் நிறுத்திக் கொள்ளப்பட்டது. ஆட்டம் சூடுபிடித்திருக்கும் இந்த நிலையில் 4ம் நாள் ஆட்டம் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இன்றைய வானிலை
போட்டி நடைபெறும் நாட்டிகம் நகரத்தின் வானிலை குறித்து அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, 3ம் நாள் ஆட்டத்தை விட பெரியளவில் இன்று மழையின் பாதிப்பு இருக்கும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இன்றைய முழு ஆட்டமுமே மழையினால் பாதிக்கப்படலாம் என கூறப்படுகிறது. நாட்டிகம்மில் இன்று அதிகாலை முதலே சாரல் மழை பெய்து வருகிறது. எனவே போட்டி தொடங்கிய பின்னரும் மழை நீடித்தால் பெரும் திருப்புமுணையாக இருக்கும் எனத்தெரிகிறது.

தினேஷ் கார்த்திக் அப்டேட்
இன்றைய வானிலை குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள இந்திய கிரிக்கெட் வீரரும், கமெண்ட்டேட்டருமான தினேஷ் கார்த்திக், இன்று முழுவதும் மழை ஆட்டத்தை கெடுக்கும் என தெரிகிறது எனக்குறிப்பிட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் சோகமடைந்துள்ளனர்.

திட்டம்
வானிலை மோசமாக இருந்தாலும், இந்திய அணியை பொறுத்தவரை வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. முதல் இன்னிங்ஸை விட இன்னும் வேகமாக இந்திய பவுலர்கள் விக்கெட்களை எடுத்துவிட்டால் வெற்றி சுலபமாகி விடும் என கேப்டன் கோலி திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. அதாவது இங்கிலாந்து அணியை ஒரு 250 ரன்களுக்கு உள்ளாக சுருட்டிவிட்டால், இந்திய அணிக்கு 155 ரன்கள் தான் இலக்காக இந்தியாவுக்கு கிடைக்கும். எனவே சுலபமாக வென்றுவிடலாம். இதற்காக இந்திய பவுலர்களிடம் ஸ்ட்ரிக்டாக திட்டங்களை கோலி வகுத்து வருவதாக தெரிகிறது.


Click it and Unblock the Notifications