
வெகு தொலைவில்
முதலில் பேட்டிங் செய்து, முதல் இன்னிங்ஸில் வெறும் 78 ரன்களுக்கு இந்தியா ஆல் அவுட்டாக, இங்கிலாந்தோ அருமையான பேட்டிங் சூழலில் 432 ரன்கள் சேர்த்தது. வழக்கம் போல், ஜோ ரூட் சதம் (121) அடிக்க, இங்கிலாந்து அபாரமான லீடிங் சென்றது. இந்த கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கும் இந்த நொடி வரை மேட்ச், இந்தியாவை விட்டு வெகு தொலைவில் தான் இருக்கிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், இந்தியாவை 2வது இன்னிங்ஸில் சீக்கிரம் ஆல் அவுட் செய்து, 3வது நாளிலேயே ஜெயித்துவிட வேண்டும் என்ற இங்கிலாந்தின் கனவை கோலி அண்ட் கோ தகர்த்துள்ளது. என்னளவில், இந்தியா தோல்வியை தள்ளிப்போட்டிருக்கிறது. அவ்வளவே! ஆனாலும், இந்தியா நம்மை பெருமை அடையச் செய்துள்ளது. எப்படி என்கிறீர்களா?

எத்தனை வெறுப்புகள்!
நேற்று 3ம் நாள் முடியும் போது, 215 - 2 என்று ஸ்கோர் போர்டு தெரிவதற்கு முக்கிய காரணம் புஜாரா. அணியை விட்டு நீக்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைத்த புஜாரா. "இந்தாள தூக்கிட்டு சூர்யகுமார சேருங்கய்யா" என்று ரசிகர்களை கோபம் அடைய வைத்த புஜாரா. தன் மீதான நம்பிக்கையை ரசிகர்கள் இழக்க காரணமாக இருந்த புஜாரா. இனி இவர் அவ்வளவு தான் என அத்தனை பேரையும் நினைக்க வைத்த புஜாரா. ஆம்! புஜாரா தான். 91 ரன்கள் 180 பந்துகளில். 15 பவுண்டரிகள். ஸ்டிரைக் ரேட் 50.56. முதல் இரண்டு போட்டிகளின் ஹீரோ லோகேஷ் ராகுல் 8 ரன்களில் அவுட்டாக, ரோஹித் ஷர்மா சர்ச்சையான முறையில் 59 ரன்களில் எல்பிடபிள்யூ ஆக, ஒரு வாய்ப்பு கூட இங்கிலாந்துக்கு கொடுக்காமல் களத்தில் நின்று வருகிறார் புஜாரா. எத்தனை வெறுப்புகள்! எத்தனை கோப கொப்பளிப்புகள்! எத்தனை வேதனைகள்..! இவை அத்தனையையும் தகர்த்து நின்றிருக்கிறார் புஜாரா.

ஆயிரம் கண்கள் தேவை
ஒருவேளை புஜாரா விரைவில் அவுட் ஆகியிருந்து ரோஹித்தோ, ராகுலோ இவ்வளவு ரன்கள் அடித்திருந்தால் அது உண்மையில் பெருமை அல்ல. அவர்கள் தான் ஃபார்மில் இருக்கிறார்களே. எந்த இங்கிலாந்து பவுலர்கள் மிக எளிதாக விக்கெட்டை வீழ்த்தினார்களோ, எந்த இங்கிலாந்து பவுலர்கள் 'இவரை காலி பண்ணுவது அல்வா சாப்பிடுறது மாதிரி' என்ற மோடில் கொண்டாடினார்களோ, அதே இங்கிலாந்து பவுலர்களை நேற்று தண்ணீர் குடிக்க வைத்துவிட்டார் புஜாரா. இதுதான் நமக்கு பெருமை. கெத்து. ஒவ்வொரு பவுண்டரி அடிக்கும் போதும், ஆண்டர்சன் முகம் சென்ற கோணத்தை பார்க்க ஆயிரம் கண்கள் வேண்டும். அதுதான் நமக்கு பெருமை. இந்த போட்டியில் வெற்றியோ, தோல்வியோ, டிராவோ.. நேற்றே ஆட்டத்தை முடிக்க நினைத்த இங்கிலாந்து பவுலர்களை இந்திய அணி வியர்க்க வைத்தது தான் என்னளவில் வெற்றி. மீண்டும் சொல்கிறன்.. இந்த போட்டியில் நாம் இன்னும் வெகுதொலைவில் இருக்கிறோம்.

500 கி.மீ குறைக்கலாம்
இங்கிலாந்தை விட இந்தியா 139 ரன்கள் பின்தங்கி உள்ளது. இன்று நான்காவது நாளில் இந்த 139 ரன்களை அடித்து, அதன் பிறகு மேற்கொண்டு 200 -250 ரன்கள் அடித்தால் தான், மீண்டும் இந்த போட்டியில் ஆதிக்கம் செலுத்துவது குறித்து இந்தியா நினைத்துப் பார்க்க முடியும். நேற்று, நமது ஸ்பெஷல் கட்டுரையில், இப்போட்டி இந்திய அணியின் கையை விட்டு 1,500 கி.மீ தொலைவிற்கு சென்றுவிட்டதாக கூறியிருந்தேன். அதை நமது மைக்கேல் வாசகர்கள் பலரும் ஆமோதிக்கும் வகையில், கமெண்ட்டுகளை தெரிவித்திருந்தனர். நன்றி!. ஆனால், இப்போது நிலைமை மாறியிருக்கிறது. ஆகையால், 1, 500 கி.மீட்டரில் இருந்து 500 கி.மீட்டரை குறைத்துக் கொள்ளலாம். நிச்சயம் குறைக்கலாம்.

இனிமேல் தான் ஆரம்பம்
இறுதியாக, ஒன்று சொல்ல விரும்புகிறேன். நேற்று புஜாரா சிறப்பாக விளையாடியதற்கு காரணம் என்ன தெரியுமா? பெருசா சீக்ரெட் ஒன்னும் இல்ல.. ஒரேயொரு விஷயத்தை செய்யக் கூடாது என்று முடிவெடுத்தார். அது, "அதிகம் டொக்கு வைப்பது". வாகான பந்துகளை விளாசுவது என்று முடிவெடுத்தார். இவ்வளவு தான் அவர் தனது பேட்டிங்கில் செய்த மாற்றம். துணிந்து அவர் இந்த முடிவை எடுத்தார். ரிசல்ட் பாசிட்டிவாக கிடைத்துவிட்டது. இன்று நிச்சயம் சதம் அடிக்கத் தான் போகிறார். ஆனால், அந்த சதத்தோடு அவரது பணி நிறைவடையப் போவதில்லை.
கதை இனிமேல் தான் தொடங்கப் போகிறது!


Click it and Unblock the Notifications











