
தொடக்கம்
இந்த போட்டியில் இந்திய அணிக்கு தொடக்கமே சிறப்பாக அமைந்துள்ளது. வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக பிட்ச் அமைக்கப்பட்டிருந்தாலும், இந்தியாவின் ஓப்பனிங் ஜோடி ரோகித் சர்மா மற்றும் கே.எல்.ராகுல் அதனை லாவகமாக எதிர்கொண்டு ரன் குவித்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டிற்கு 126 ரன்களை சேர்த்தது. சிறப்பாக விளையாடி வந்த ரோகித் சர்மா, 83 ரன்களுக்கு வெளியேறினார்.

நிதான ஆட்டம்
மறுமுணையில் தொடர்ந்து அட்டகாசம் செய்த கே.எல்.ராகுல் நிதானமாக ரன்களை குவித்தார். இங்கிலாந்து பவுலர்கள் எவ்வளவு மேஜிக்குகளை செய்து பார்த்த போதும், அவர்களை சுலபமாக எதிர்கொண்ட கே.எல்.ராகுல் சதம் விளாசி அசத்தினார். அதில் ஒரு சிக்ஸரும் 9 பவுண்டரிகளும் அடங்கும். ராகுலின் இந்த சதம் இந்தியாவுக்கு ஒரு புதிய நம்பிக்கையை கொடுத்துள்ளது.

சாதனை
ஏனென்றால் லார்ட்ஸ் மைதானத்தில் சதம் அடிப்பது என்பது மிகபெரும் விஷயமாக பார்க்கப்படுகிறது. அங்கு சதமடித்த 3வது இந்திய ஓப்பனர் என்ற பெருமையை ராகுல் பெற்றுள்ளார். இதற்கு முன்னர் அங்கு 1952ம் ஆண்டு வினோ மான்கட் 184 ரன்களை விளாசியிருந்தார். அதன் பின்னர் 1990ம் ஆண்டு ரவி சாஸ்திரி 100 ரன்களை அடித்தார்.

அதிக சதமடித்த ஓப்பனர்கள்
இதுமட்டுமல்லாமல் ஆசிய கண்டத்திற்கு வெளியில் அதிக சதம் அடித்த இந்திய ஓப்பனிங் வீரர்களின் பட்டியலில் கே.எல்.ராகுல் 2வது இடத்தை சேவாக்குடன் பகிர்ந்துள்ளார். சுனில் கவாஸ்கர் 15 சதங்களுடன் முதலிடத்தில் உள்ளார். விரேந்திர சேவாக் 4 சதங்களுடன் 2வது இடத்திலும், வினோ மான்கட் மற்றும் ரவி சாஸ்திரி ஆகியோர் 3 சதங்களுடன் 3வது இடத்திலும் உள்ளனர்.


Click it and Unblock the Notifications