
அசத்தல் ஃபார்ம்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் சிறப்பாக பந்துவீசிய ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு வாய்ப்பு கொடுக்கப்படாதது ஏன் என்ற விவாதம் இன்னும் ஓயாமல் நீடித்து வருகிறது. வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான இங்கிலாந்து களத்தில் கூட அஸ்வின் பேட்ஸ்மேன்களை திணறடிக்கக் கூடியவர். ஆனால் விராட் கோலி அவரை ஓரம்கட்டியது சர்ச்சையை கிளப்பியது.

2வது போட்டி
இந்நிலையில் 2வது டெஸ்ட் போட்டியிலும் அஸ்வினுக்கு இடம் கிடைக்கவில்லை. இரு அணிகளுக்கும் இடையேயான 2வது டெஸ்ட் போட்டி இன்று லண்டன் நகரத்தில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கியுள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் பவுலிங்கை தேர்வு செய்துள்ளார். இந்தப்போட்டிக்கான இந்திய அணியின் ப்ளேயிங் 11ல் முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

அதிருப்தி
ஷர்துல் தாக்கூர் காயம் காரணமாக 2வது டெஸ்டில் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் அவரின் இடத்திற்கு நிச்சயம் அஸ்வின் தான் களமிறக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது. ஆனால் மீண்டும் ஒரு வேகப்பந்த்வீச்சாளராக இஷாந்த் சர்மாவையே களமிறக்கியுள்ளார் விராட் கோலி. இதனால் ரசிகர்கள் கோபமடைந்துள்ளனர்.

விராட் கோலி மீது கோபம்
ரவிச்சந்திரன் அஸ்வின் சிறப்பாக பந்துவீசி வந்த போதும் முதலில் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓரம்கட்டப்பட்டார். தற்போது டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓரம்கட்டப்பட்டிருக்கிறார் என ரசிகர்கள் கூறி வருகின்றனர். இதனை வேண்டுமென்றே விராட் கோலி செய்து வருவதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்து வருகிறது. ஆனால் இதில் கோலியின் பக்கமும் நியாயம் உள்ளது என ரசிகர்கள் ஆதரவு அளித்து வருகின்றனர்.

பவுலிங் தேர்வு
முதல் டெஸ்ட் போட்டியில் இருந்ததை விட 2வது டெஸ்டில் அதிக புற்களை கொண்டு பிட்ச் தயார் செய்யப்பட்டுள்ளது. புற்கள் அதிகமாக இருந்தால், வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக அமையும். எனவே 2வது டெஸ்டில் இன்னும் ஒரு சீனியர் வேகப்பந்துவீச்சாளரையும் வைத்துக்கொண்டு களமிறங்கினால் சிறப்பாக இருக்கும் என விராட் கோலி நினைத்துள்ளார். கடந்த போட்டியில் பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ், ஷர்துல் சிறப்பாக வீசியிருந்தனர். எனவே பேட்டிங்கை மனதில் வைத்தும் ஜடேஜாவுக்கே வாய்ப்பு வழங்கப்படும் எனக்கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











