பிர்மிங்காம்: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோத உள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டி, எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்தப் போட்டியின் போது வானிலை எப்படி இருக்கும், பிட்ச் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்குமா அல்லது பந்துவீச்சிற்கு சாதகமாக இருக்குமா என்பதைப் பற்றி பார்க்கலாம்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றன. இந்தத் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி நன்றாக பேட்டிங் செய்து 800 ரன்களுக்கு மேல் சேர்த்தும் ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. அதற்கு முக்கிய காரணம் அனுபவமற்ற பந்துவீச்சு மற்றும் ஃபீல்டிங்கில் ஏற்பட்ட சொதப்பல்தான்.

இந்த நிலையில், இரண்டாவது போட்டி நடக்கும் எட்ஜ்பாஸ்டன் மைதானமும் பந்துவீச்சிற்கு சாதகமாக இருக்கும் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. இந்தப் போட்டி நடைபெறும் ஐந்து நாட்களில் முதல் மூன்று நாட்கள் வரை மழை பெய்வதற்கான வாய்ப்பு இல்லை. நான்காவது மற்றும் ஐந்தாவது நாட்களின் போது லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. எனினும், அது போட்டியை பெரிய அளவில் பாதிக்காது எனக் கூறப்படுகிறது.
மேலும், இந்தப் போட்டி நடைபெறும் ஐந்து நாட்களும் வானம் மேகமூட்டமாக இருக்கும் எனவும், காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருக்கும் எனவும் வானிலை அறிக்கை சுட்டிக்காட்டி இருக்கிறது. வானம் மேகமூட்டமாக இருக்கும்போது அது பந்துவீச்சிற்கு சாதகமான சூழ்நிலையை அளிக்கும். எனவே, இரண்டாவது டெஸ்ட் போட்டியும் வேகப்பந்துவீச்சிற்கு சாதகமான சூழ்நிலையில் நடக்கும் என எதிர்பார்க்கலாம். இந்த மைதானத்தின் முதல் இன்னிங்ஸ் சராசரி ஸ்கோர் 320 ஆகும்.
இந்திய அணி ஏற்கனவே முதல் டெஸ்டில் பந்துவீச்சில் சிரமப்பட்ட நிலையில், எட்ஜ்பாஸ்டனின் இந்த நிலைமை அவர்களுக்கு மேலும் சவாலாக இருக்கும். இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர்கள் இந்த சூழ்நிலையை நன்கு பயன்படுத்திக்கொள்ள முயற்சிப்பார்கள் என்பதால், இந்திய பேட்ஸ்மேன்கள் கூடுதல் கவனத்துடன் விளையாட வேண்டியிருக்கும். இந்தப் போட்டியில் இந்திய அணியின் பந்துவீச்சு எப்படி செயல்படுகிறது என்பதைப் பொறுத்தே போட்டியின் முடிவு அமையும்.