பிர்மிங்காம்: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி பிர்மிங்காம் நகரில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்தப் போட்டியின் பிட்ச் நிலவரம் குறித்து இப்போது பார்க்கலாம்.
எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் இதுவரை இரண்டாவதாக பேட்டிங் செய்த அணிகளே அதிகமாக வெற்றி பெற்றுள்ளன. அந்த மைதானத்தில் இதுவரை 56 டெஸ்ட் போட்டிகள் நடைபெற்றுள்ளன. அதில் 23 முறை இரண்டாவதாக பேட்டிங் செய்த அணியும், 18 முறை முதலில் பேட்டிங் செய்த அணியும் வெற்றி பெற்று இருக்கின்றன.

கடைசியாக நடந்த ஐந்து போட்டிகளில், முதலில் பேட்டிங் செய்த அணி ஒருமுறை மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. அதுவும் 2019ஆம் ஆண்டில் நடந்தது. எனவே, இந்தப் போட்டியில் டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்யும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இங்கிலாந்து அணி அதிரடியாக விளையாடும் 'பேஸ்பால்' முறையைப் பின்பற்றி வரும் நிலையில், இங்கிலாந்து மண்ணில் நடைபெறும் டெஸ்ட் போட்டிகளுக்கு பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளங்களே தயாரிக்கப்படுகின்றன. அந்த வகையில், எட்ஜ்பாஸ்டனிலும் பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளம் தான் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
முதல் போட்டியிலும் அதேதான் நடந்தது. வேகப்பந்து வீச்சாளர்களால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை; போட்டி ஐந்தாவது நாள் வரை சென்றது. இங்கிலாந்து அணியில் நீளமான பேட்டிங் வரிசை இருப்பதால், அவர்கள் அதை வைத்து ரன் குவிக்க முயற்சி செய்கின்றனர். அது அந்த அணிக்கு பலன் அளிக்கிறது. எனவே, இந்த முறை இந்திய அணி டாஸ் வென்றால் நிச்சயமாக முதலில் பேட்டிங்கைத்தான் தேர்வு செய்ய வேண்டும். ஏனெனில், பிட்ச் சரியாக ஒத்துழைக்காத பட்சத்தில், பேட்டிங்தான் கை கொடுக்கும்.
இது ஒருபுறம் இருக்க, இந்தப் போட்டியின் நான்காவது மற்றும் ஐந்தாவது நாள் அன்று மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. அப்போது பேட்டிங் செய்வது சற்று கடினமாக இருக்கும் என்பதையும் மனதில் கொள்ள வேண்டும். எனினும், போட்டியை பாதிக்கும் அளவுக்கு பெரிய மழை பெய்யாது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இது ஓரளவுக்கு பேட்டிங் செய்யும் அணிக்கு சாதகமான அம்சமாக இருக்கும்.
இந்தத் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்திருக்கும் நிலையில், இரண்டாவது போட்டியில் இந்திய அணி வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இரண்டாவது போட்டியில் ஜஸ்பிரித் பும்ரா பங்கேற்க மாட்டார் எனவும் அணியின் வட்டாரத்திலிருந்து தகவல் வெளியாகியுள்ளது. ஒருவேளை கடைசி நேரத்தில் அவர் அணியில் சேர்க்கப்படுவாரா என்பதையும் பார்க்க வேண்டும்.