
இந்தியாவின் 2வது இன்னிங்ஸ்
2வது இன்னிங்ஸில் இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து ஏமாற்றத்தை கொடுத்தது. விராட் கோலி உட்பட டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அனைவருமே அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். நேற்றைய ஆட்ட நேர முடிவில், இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்தது. ரஹானே 61 ரன்களும், புஜாரா 45 ரன்கள் எடுத்தும் ஆட்டமிழந்தனர். கேப்டன் விராட் கோலி 20 ரன்கள் மட்டும் எடுத்து வெளியேறினார். ரிஷப் பண்ட் 14 ரன்களுடனும், இஷாந்த் ஷர்மா 4 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

அதிர்ச்சி தொடக்கம்
இந்த சூழலில், இன்று (ஆக.16) ஐந்தாவது மற்றும் கடைசி நாள் ஆட்டம் தொடங்கியது. போட்டி தொடங்கிய சில நிமிடங்களிலேயே ரிஷப் பண்ட் 22 ரன்களிலும், இஷாந்த் ஷர்மா 16 ரன்களிலும் வெளியேறினார்கள். கைவசம் இன்னும் 2 விக்கெட்டுகள் மட்டுமே இருந்தது. இதன் பின்னர் களமிறங்கிய ஜஸ்பிரித் பும்ராவை இங்கிலாந்து வீரர்கள் படாதபாடு படுத்தினர்.

பும்ரா - ஷமி
இங்கிலாந்து போன்ற கடினமான களத்தில் முன்னணி பேட்ஸ்மேன்களே ரன் எடுக்க திணறுகின்றனர். அப்படி இருக்கையில் பும்ரா மற்றும் ஷமி சிறிது நேரம் நின்றுவிட்டு விக்கெட்டை பறிகொடுத்திருப்பார்கள். ஆனால் இங்கிலாந்து வீரர்கள் வேண்டுமென்றே விக்கெட் எடுக்க முற்படாமல் பும்ராவை தாக்கும் வகையில் பந்துகளை வீசினர். இதுமட்டுமின்றி ஒவ்வொரு ஓவருக்கும் இடையே பும்ராவிடம் வம்பிழுத்தனர்.

காரணம்
இந்த டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டத்தில், இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது, அந்த அணியின் சீனியர் பவுலர் ஜேம்ஸ் ஆண்டர்சன் பேட்டிங் செய்ய வந்த போது, இந்தியாவின் பும்ரா ஒரே ஓவரில் தொடர்ந்து பவுன்சர் பந்துகள் போட்டு தாக்குதல் நடத்தினர். இதில் ஆண்டர்சன் ஹெல்மெட், தோள்பட்டை, கால் என அனைத்து இடங்களிலும் தாறுமாறாக அடி வாங்கினார். பும்ரா வேண்டுமென்றே பவுன்சர் போட்டதாக நினைத்து கடுப்பான ஆண்டர்சன் பழிவாங்குவதற்காகவே தனது அணியினருடன் இன்று ஆட்டத்தில் அப்படி நடந்துக்கொண்டனர்.

விணை தேடிக்கொண்ட இங்கிலாந்து
இந்நிலையில் அவர்களின் திட்டம், சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்ட கதையை போல ஆகிவிட்டது. இங்கிலாந்து வீரர்களின் பந்துவீச்சை நன்கு புரிந்துக் கொண்ட முகமது ஷமி - பும்ரா ஜோடி பவுண்டரி, சிக்ஸர் என பேட்டை சுழற்றினர். இருவரும் சுதாரித்துக் கொண்டு காட்டிய அதிரடியால் 9வது விக்கெட்டிற்கு இந்த ஜோடி 77 ரன்களை குவித்தது. முகமது ஷமி 56 ரன்களும், ஜஸ்பிரித் பும்ரா 34 ரன்களும் விளாசினர். இதனால் 220 க்குள் முடியவேண்டிய இந்திய அணியின் ஸ்கோர் 298 ரன்களுக்கு சென்றது. அதிலும் விராட் கோலி டிக்ளர் செய்துவிட்டார். இல்லையென்றால் 300 ரன்களை கடந்திருக்கும்.

திணறல்
கடைசி நாள் ஆட்டத்தில் முதல் செஷன் முடிவடைந்தது. மீதமுள்ள நாளில் 272 ரன்களை அடிக்க இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் இவ்வளவு பெரிய ஸ்கோரை ஒரே நாளில் அடிக்க வேண்டும் என்றால் அதிரடியாக ஆடியே தீர வேண்டும். எனவே அதன்படி அதிரடி காட்ட முயன்ற இங்கிலாந்து அணி 67 ரன்களுக்குள் 5 விக்கெட்களை இழந்து திணறியது.


Click it and Unblock the Notifications











