பிர்மிங்காம்: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் விளையாடி வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டி, இங்கிலாந்தில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 587 ரன்கள் எடுத்தது. அடுத்ததாக ஆடிய இங்கிலாந்து அணி 407 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து இரண்டாவது இன்னிங்ஸ் ஆடிய இந்திய அணி, ஆறு விக்கெட் இழப்பிற்கு 407 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு 608 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயம் செய்திருக்கிறது. நான்காம் நாள் ஆட்ட நேரம் முடிவில் இங்கிலாந்து அணி மூன்று விக்கெட் இழப்பிற்கு 72 ரன்கள் எடுத்து இருக்கிறது.

இங்கிலாந்து அணி ஐந்தாவது நாள் ஆட்டத்தில் 536 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற நிலையில் உள்ளது. இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்றால், ஐந்தாவது நாள் ஆட்டத்தில் ஏழு விக்கெட்களை வீழ்த்த வேண்டிய அவசியம் உள்ளது. இந்திய அணியின் வெற்றிக்குக் குறுக்கே இந்த ஏழு விக்கெட்கள் மட்டுமே உள்ளன.
7 விக்கெட்களை வீழ்த்துவது எளிது என்ற பொதுவான எண்ணம் இருந்தாலும், முதல் டெஸ்ட் போட்டியில் நடந்த சம்பவங்கள் நம் கண் முன் வந்து போகின்றன. முதல் டெஸ்ட் போட்டியின் ஐந்தாவது நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 350 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலையில் இருந்தது. அப்போது இந்திய அணி 10 விக்கெட் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற நிலையில், 5 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தியது. இதன் காரணமாக இங்கிலாந்து அணி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
தற்போது இங்கிலாந்து அணியால் எட்ட முடியாத ஒரு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கும் நிலையில், இங்கிலாந்து அணி 'டிரா' செய்ய முயற்சிக்கும். விக்கெட் விழாமல் ஆட்டத்தை முடித்து, போட்டியைச் சமன் செய்ய இங்கிலாந்து அணி முயற்சிக்கும். அது இந்திய பந்துவீச்சாளர்களுக்கு சவாலாக அமையக்கூடும். இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் தவறு செய்யவில்லை என்றால், இந்திய வீரர்களால் விக்கெட் வீழ்த்துவது கடினமாகிவிடும்.
முதல் போட்டி ஐந்தாவது நாள் ஆட்டத்தில் இந்திய பந்துவீச்சாளர்கள் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்த நிலையில், அதேபோல இப்போதும் ஏழு விக்கெட்டுகளை வீழ்த்த வாய்ப்பு உள்ளது. ஆகாஷ் தீப் மற்றும் முகமது சிராஜ் முதல் இன்னிங்ஸில் சிறப்பாக பந்துவீசினர். சிராஜ் 6 விக்கெட்டுகளையும், ஆகாஷ் தீப் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருந்தனர். அவர்கள் இருவரும் மீண்டும் இணைந்து பந்துவீசும் போது அதே அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்த முடியும். எனவே, இந்திய அணி இந்தப் போட்டியில் வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளது.