பிர்மிங்காம்: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் விளையாட உள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்பு நடந்த பயிற்சியில் ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள் இரண்டு விதமான நிறத்தில் இருக்கும் பந்துகளை வைத்து பந்து வீசினர்.
அதாவது டெஸ்ட் போட்டிகளுக்கு பயன்படுத்தப்படும் சிகப்பு நிறப்பந்து மட்டுமின்றி ஒரு நாள் போட்டி மற்றும் டி20 போட்டிகளில் பயன்படுத்தப்படும் வெள்ளை பந்தையும் பயன்படுத்தி வலைப் பயிற்சியில் பந்து வீசினர். தற்போது இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் நிலையில் எதற்காக ஒரு நாள் போட்டி மற்றும் டி20 போட்டிக்கான வெள்ளை நிற பந்தை பயன்படுத்தி பயிற்சி செய்ய வேண்டும் என்ற கேள்வி எழுந்தது.

இது குறித்து இந்திய அணியின் துணை பயிற்சியாளர் ரையன் டோஷ்கேட் விளக்கம் அளித்துள்ளார். இந்திய அணி இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன்பாக வெள்ளை நிற பந்தை பயன்படுத்தும் தொடர்களில் நீண்ட காலம் விளையாடி வந்ததை அவர் சுட்டிக்காட்டினார். அதாவது பிப்ரவரி மாதத்தில் சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும், அதற்கு முந்தைய சில வாரங்களில் சாம்பியன்ஸ் ட்ராபி தொடருக்கான பயிற்சியாக இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் தொடர் மற்றும் மற்றும் மற்றும் டி20 தொடரிலும் இந்திய அணி விளையாடியது.
அதை தொடர்ந்து இரண்டு மாதங்கள் வரை நீண்ட ஐபிஎல் தொடரில் இந்திய அணி வீரர்கள் விளையாடினார்கள். சுமார் நான்கு மாத காலம் வெள்ளை நிற பந்தை தான் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள் பயன்படுத்தி இருக்கிறார்கள். அந்த பயன்பாட்டுக்கு பிறகு உடனடியாக இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் சிகப்பு நிற பந்தை பயன்படுத்தி அவர்கள் பந்து வீச வேண்டி உள்ளது.
எனினும், வெள்ளை நிற பந்தை பயன்படுத்தியது அவர்களுக்கு ஒரு வித பழக்கத்தை ஏற்படுத்தி விட்டது. அதனால் சிகப்பு நிற பந்திலும் அவர்கள் வெள்ளை நிற பந்தை பயன்படுத்துவது போலவே பயன்படுத்தி பந்து வீசி வருகிறார்கள். அதனால் தான் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பந்துவீச்சாளர்களால் சரியாக பந்து வீச முடியவில்லை.
இதை ஒட்டி தான் இந்திய அணி வீரர்கள் இரண்டு நிற பந்துகளையும் பயன்படுத்துகிறார்கள். இதை நச்சு நீக்கம் என இந்திய அணியின் துணை பயிற்சியாளர் குறிப்பிட்டார். அப்படி என்றால் என்ன? வெள்ளை நிற பந்தை பயன்படுத்துவதற்கும், சிவப்பு நிற பந்தை பயன்படுத்துவதற்கு என்ன வித்தியாசம்? என்று பார்க்கலாம்
டெஸ்ட் கிரிக்கெட்டில் சிகப்பு பந்தின் சீம் (பந்து தைக்கப்பட்டிருக்கும் கோடு) நிலை, பந்தின் சுழற்சி மற்றும் சீரான லென்த் மற்றும் லைனில் பந்துவீசுவது மிகவும் முக்கியம். ஆனால், ஐபிஎல் போன்ற வெள்ளைப்பந்து போட்டிகளில், வேக மாறுபாடுகள், மெதுவான பந்துகள், யார்க்கர்கள் போன்றவற்றை அதிகம் பயன்படுத்துவார்கள். இது டெஸ்ட் கிரிக்கெட்டிற்குத் தேவையான கட்டுப்பாட்டையும், சீரான பந்துவீச்சு ஒழுக்கத்தையும் குறைக்கலாம். இந்த 'நச்சு நீக்கம்' என்பது, வெள்ளைப்பந்து கிரிக்கெட்டின் இந்த 'தவறான பழக்கவழக்கங்களிலிருந்து' மீண்டு வந்து, சிகப்பு பந்துக்கு ஏற்ற அடிப்படை பந்துவீச்சு நுணுக்கங்களான சீம் நிலை, ரிஸ்ட் பொசிஷன் (மணிக்கட்டு நிலை) போன்றவற்றை மீண்டும் செய்வதாகும்.
இரண்டு நிறத்திலும் உள்ள பந்துகளை பயன்படுத்துவதன் முக்கிய பலனே, பந்துவீச்சாளர்கள் பந்தின் சீம் எப்படி சுழல்கிறது, அது காற்றில் எவ்வாறு நகர்கிறது என்பதைத் தெளிவாகக் காண முடியும் என்பதே. இது பந்துவீச்சாளர்களுக்கு தங்கள் பந்துவீச்சின் துவக்கப் புள்ளி (release point) மற்றும் சீம் பொசிஷனைச் சரிசெய்ய உதவுகிறது.
முதல் டெஸ்ட் போட்டியில் பந்துவீச்சில் சில சீரற்ற தன்மைகள் காணப்பட்ட நிலையில், நீண்ட வெள்ளைப்பந்து சீசனுக்குப் பிறகு, பந்துவீச்சாளர்கள் மீண்டும் டெஸ்ட் போட்டிக்குத் தேவையான கட்டுக்கோப்பான பந்துவீச்சுக்குத் திரும்புவது அவசியம். இந்த பயிற்சி, எதிர்பாராத 'சொதப்பல்களை' தவிர்த்து, துல்லியமான பந்துவீச்சை வெளிப்படுத்த உதவும் என அணி நிர்வாகம் நம்புகிறது. கடந்த இரண்டு வாரங்களாக இந்த உத்தியை அணி பயன்படுத்தி வருவதாக டோஷ்கேட் கூறினார்.