
இந்தியாவின் 2வது இன்னிங்ஸ்
மிகப்பெரும் எதிர்பார்ப்புடன் தொடங்கிய 2வது இன்னிங்ஸில் இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து ஏமாற்றத்தை கொடுத்தது. விராட் கோலி உட்பட டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அனைவருமே அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். நேற்றைய ஆட்ட நேர முடிவில், இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்தது. ரஹானே 61 ரன்களும், புஜாரா 45 ரன்கள் எடுத்தும் ஆட்டமிழந்தனர். கேப்டன் விராட் கோலி 20 ரன்கள் மட்டும் எடுத்து வெளியேறினார். ரிஷப் பண்ட் 14 ரன்களுடனும், இஷாந்த் ஷர்மா 4 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

ஏமாற்றிய மிடில் ஆர்டர்
இந்நிலையில் இன்று கடைசி மற்றும் 5வது நாள் ஆட்டம் தொடங்கியது. இந்தியாவின் கைவசம் டெயில் எண்டர்ஸான நான்கு விக்கெட்டுகளே மீதமிருக்க 154 ரன்கள் மட்டுமே முன்னிலைப் பெற்றிருந்தது. நம்பிக்கை நட்சத்திரமாக பார்க்கப்பட்ட ரிஷப் பண்ட் 22 ரன்களுக்கு வெளியேறினார். அதன் பின் வந்த இஷாந்த் சர்மாவும் 16 ரன்களுக்கு வெளியேறினார். இதனால் இந்திய அணி 208 ரன்களுக்கு 8 விக்கெட்களை இழந்தது. இனி இந்திய அணியின் கதை அவ்வளவு தான் என அனைவராலும் முடிவே செய்யப்பட்டுவிட்டது.

9வது விக்கெட் பார்ட்னர்ஷிப்
ஆனால் அதனை மாற்றினர் 9வது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த முகமது ஷமி- பும்ரா. இங்கிலாந்து பவுலர்கள் முதலில் அவர்களை அசால்டாக நினைத்த நிலையில் நன்றாக வாங்கிக்கட்டிக்கொண்டனர். முன்னணி பேட்ஸ்மேன்களே இங்கிலாந்து பவுலிங்கை எதிர்கொள்ள திணறிய சூழலில் முகமது ஷமி பவுண்டரி, சிக்ஸர் என விளாசினார். அவருடன் ஜோடி சேர்ந்து ஆடிய பும்ராவும் எதிரணி பவுலர்களை தனது தடுப்பாட்டத்தால் கடுப்பேற்றினார். இதனால் இந்த ஜோடி 9வது விக்கெட்டிற்கு 77 ரன்களை சேர்த்தது. 9வது விக்கெட்டிற்கு இந்தியாவின் அதிகபட்ச ரன்கள் இதுவே ஆகும்.

உற்சாகத்தில் கோலி
அவர்களின் ஒவ்வொரு பவுண்டரி மற்றும் சிக்ஸர்களை களத்திற்கு வெளியில் அமர்ந்து பார்த்துக்கொண்டிருந்த கேப்டன் விராட் கோலி படு உற்சாகத்துடன் துள்ளிக் குதித்தார். நீண்ட நேரமாக சோகமாக வாடிப்போய் இருந்த அவரின் முகத்தில் புன்னகை பூத்தது. இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில் கங்குலி டி சர்ட்டை கழட்டி உற்சாகத்தில் குதித்தது பலரும் அறிந்திருப்போம். அதே குஷியில் தான் கோலியும் இன்று இருந்தார். அதுகுறித்து வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கோலி திட்டம்
இந்திய அணி 298 ரன்கள் எடுத்திருந்த போது கோலி டிக்ளர் செய்தார். இதனால் இங்கிலாந்து அணிக்கு 272 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. கடைசி வரை களத்தில் இருந்த ஷமி 56 ரன்களுடனும், பும்ரா 34 ரன்களுடனும் நாட் அவுட்டாகாமல் இருந்தனர். இந்திய அணிக்கு ஓரளவிற்கு எதிர்பார்த்த ஸ்கோர் கிடைத்துள்ளது. ஏற்கனவே இன்று ஒரு செஷன் முடிவடைந்து விட்டது. எனவே மீதம் இருக்கும் நாளுக்குள் இங்கிலாந்து இலக்கை அடைய வேண்டும் என்றால் அடித்து ஆட வேண்டும். எனவே கோலி, பேட்ஸ்மேன்கள் தூக்கி அடிப்பது போன்ற பவுலிங் அட்டாக்கிங்கை வலியுறுத்தி இருப்பதாகவும், அதனால் விக்கெட்கள் மளமளவென விழ எதிர்பார்த்திருப்பதாகவும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











